Published : 27 Jan 2017 12:03 PM
Last Updated : 27 Jan 2017 12:03 PM

உரிமைகளை மீட்டெடுக்க தமிழர்கள் ஒன்றுபட வேண்டும்: பாளை. பொதுக்கூட்டத்தில் சீமான் பேச்சு

தமிழர்கள் தங்களது உரிமைகளை மீட்டெடுக்க ஒன்றுபட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் அக்கட்சியின் சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் பங்கேற்று பேசியதாவது:

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவேண்டும். வெளிநாட்டு குளிர்பானங்களை தடை செய்ய வேண்டும். இயற்கை பானங்களை தேசியபானங்களாக அறிவித்து விற்பனையை ஊக்குவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான உரிமையை லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களின் போராட்டத்தால் மீட்டெடுத்துள்ளோம். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றவும் தமிழகத்தின் இயற்கை வளங்களை அழிவிலிருந்து பாதுகாக்கவும் நாம் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்க வேண்டும். தமிழனின் பாரம்பரியத்தை, அடையாளத்தை, உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார் அவர்.

கூட்டத்துக்கு கட்சியின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, நிர்வாகிகள் ராஜன், அன்பரசு, சரவணா, செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x