Published : 13 Jan 2014 07:38 PM
Last Updated : 13 Jan 2014 07:38 PM

கருணாநிதியுடன் திருமாவளவன் சந்திப்பு

திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இன்று சந்தித்துப் பேசினார்.

சுமார் அரை மணி நேர சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த திருமாவளவன் கூறும்போது, "கருணாநிதிக்கு தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தேன்.

மார்ச் 7 முதல் 28 வரை ஜெனீவாவில் மனித உரிமை ஆணையக் கூட்டம் நடக்கிறது. இதில் இலங்கையின் போர் அத்துமீறல் குறித்து அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து வலியுறுத்த உள்ளது. இதேபோல் இந்திய அரசும் தீர்மானத்தை முன்மொழிய டெசோ சார்பில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி பேசினேன்" என்றார்.

திமுக அணியில் தேமுதிக சேருமா என்று கேட்டதற்கு, "மதவாத சக்திகள் வென்றுவிடக் கூடாது என்பதற்காக பா.ஜ.க. கூட்டணியில் சேரக்கூடாது என்று விஜயகாந்திடம் கூறியிருந்தேன். பிப்ரவரி 2–ம் தேதி நடக்கவுள்ள கட்சி மாநாட்டில் கருத்து கேட்டு முடிவு எடுப்பதாக அவர் கூறினார்.

திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்க வேண்டும் என்பதை கருணாநிதிதான் முடிவு செய்வார்" என்றார் திருமாவளவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x