Published : 19 Jul 2016 08:49 AM
Last Updated : 19 Jul 2016 08:49 AM

பசுமை தீர்ப்பாயத்துக்காக தேர்வு செய்யப்பட்ட ‘கல்சா மகால்’ கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி தீவிரம்: அக்டோபருக்குள் முடிக்க திட்டம்

தேசிய பசுமைத் தீர்ப்பாய அலுவலகத்துக்கு சேப்பாக்கத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ‘கல்சா மகால்’ பாரம்பரியக் கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இப்பணிகள் 3 மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று தெரிகிறது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வு கடந்த 2012 நவம்பர் 1-ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது. அதுமுதல், அரும்பாக்கத்தில் உள்ள மாசு கட்டுப்பாடு வாரிய சென்னை மாவட்ட அலுவலகத்தில் தீர்ப் பாயம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

நாட்டில் உள்ள 5 பசுமைத் தீர்ப்பாய அமர்வுகளில் தென்னிந் திய அமர்வில் மட்டும்தான் அதிக பட்சமாக 1,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வரு கின்றன. டெல்லியில் உள்ள முதன் மை அமர்வுக்கு அடுத்தபடியாக, 2 அமர்வுகளைக் கொண்ட மண் டலமாக தென்னிந்திய மண்டலம் விளங்குகிறது. ஆனால், அதற் கேற்ற இட வசதி இங்கு இல்லை. வழக்கறிஞர்களுக்கு 30 இருக்கை களும், வாதி, பிரதிவாதிகள் அமர 8 இருக்கைகளுமே உள்ளன. இதனால், விசாரணையின்போது, அமர்வின் உள்ளேயும், வெளியிலும் அனைவரும் வெகுநேரம் நிற்கவேண்டி உள்ளது.

இங்கு கேரள, கர்நாடக வழக்கு கள் அதிகம் விசாரிக்கப்படு கின்றன. அந்த மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் சென்ட்ரல் வரும் வழக்கறிஞர்கள், அங்கிருந்து அரும்பாக்கம் செல்லவும் சிரமப்படுகின்றனர். தமிழக வழக்கறிஞர்களும் இங்கு ஆஜராகிவிட்டு, உயர் நீதிமன்றத்துக்கு எளிதில் செல்ல முடிவதில்லை. எனவே, உயர் நீதிமன்றத்துக்கு அருகிலேயே பசுமைத் தீர்ப்பாய அமர்வை அமைக்க வேண்டும் என்பது வழக்கறிஞர்களின் கோரிக்கையாக இருந்தது.

இதை கருத்தில் கொண்டு, பசுமைத் தீர்ப்பாய அலுவலகத்துக்கு புதிய இடமாக சேப்பாக்கத்தில் பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் உள்ள பாரம்பரிய கட்டிடமான ‘கல்சா மகால்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. தீ விபத்தில் சேதம் அடைந்த இக்கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி தற்போது வேகமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பசுமைத் தீர்ப்பாயத்துக்கு இடம் ஒதுக்குவது தொடர்பாக தீர்ப்பாய நிர்வாகம் - தமிழக அரசு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. சேப்பாக்கத்தில் பொதுப்பணித் துறை வளாகத்தில் உள்ள ‘கல்சா மகால்’ தரைதளத்தை வழங்குமாறு தீர்ப்பாய நிர்வாகம் கோரியது. தமிழக அரசு அதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

சேப்பாக்கம் பேலஸின் ஒரு பகுதியான ‘கல்சா மகால்’ 1768-ல் இந்தோ - சார்சனிக் கட்டிடக் கலை யில் கட்டப்பட்டது. இது 30 ஆயிரம் சதுரஅடி பரப்பு கொண்டது. கடந்த 2012-ல் தீப்பிடித்து சேதமடைந்த இக்கட்டிடம் தற்போது ரூ.16 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பாரம்பரியக் கட்டிடம் என்பதால், அனுபவம் வாய்ந்த பிரத்தியேக பணியாளர்களைக் கொண்டு பழமை மாறாமல், நுணுக்கமாக புதுப்பிக்கப்படுகிறது. பணிகளை அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

பசுமைத் தீர்ப்பாயத்தில் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்துக்காக ஆஜராகிவரும் வழக்கறிஞர் எம்.ஆர்.கோகுல்கிருஷ்ணன் கூறியபோது, ‘‘தற்போது சுற்றுச்சூழல் இழப்பீட்டு ஆணைய விசாரணையில் உள்ள 1 லட்சம் வழக்குகளையும் பசுமைத் தீர்ப்பாயம் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், போதிய இடம் இல்லாததால் 3-வது அமர்வு தொடங்கும் திட்டம் நிலுவையில் உள்ளது. ‘கல்சா மகால்’ வளாகத்துக்கு பசுமைத் தீர்ப்பாயம் வந்துவிட்டால், அங்கு 3 அமர்வுகளை நடத்தும் அளவுக்கு இடம் உள்ளது. உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், பொதுமக்களும் எளிதில் வந்துசெல்ல முடியும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x