Published : 22 Sep 2018 02:31 PM
Last Updated : 22 Sep 2018 02:31 PM
கருணாநிதி இல்லாத திமுகவில் திராவிடம் மட்டுமே உள்ளது என, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று (சனிக்கிழமை) மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அதன் விவரம்:
அதிமுக அமைச்சர்கள் மீது திமுக ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பி வருகிறதே?
ஊழல் ஆட்சி நடைபெற கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், எதிர்கட்சி ஊழல் குற்றச்சாட்டை சுமத்துகிறது என்பதாலேயே அதனை புனிதமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழக அரசு இதுகுறித்து முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருணாநிதி இறந்தபோது திமுகவுடன் பாஜக காட்டிய நெருக்கம் இப்போது ஏன் இல்லை?
நட்பு வேறு. அரசியல் வேறு. கூடா நட்பு கேட்டில் முடியும் என காங்கிரஸை நோக்கி கருணாநிதி சொன்னார். அந்த கட்சியுடன் திமுக நெருக்கமாக இருக்கின்றது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாங்கள்தான் வெல்வோம் என அதிமுகவினர் சொல்கிறார்களே?
இப்போது எல்லா கட்சியினரும் அப்படித்தான் சொல்வார்கள். தேர்தல் நெருங்கும் போதுதான் தெரியும்.
கருணாஸ் கருத்து குறித்து...
கருணாஸ் குறிப்பிட்ட சமூக சங்க தலைவர் மட்டுமல்ல, எம்எல்ஏவும் கூட. அவருக்கென கடமைகள் இருக்கின்றன. அவரது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். அத்துடன் அதனை பெரிதாய் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. சிலரை திருப்திப்படுத்த பேசியிருக்கலாம். எல்லோரும் சகோதரர்கள். மத, சாதி பெயரால் பிளவுகள் ஏற்படுவது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. இவ்வளவு காலமும் பிளவை ஏற்படுத்தித்தான் தமிழகத்தில் அரசியல் நடத்தியிருக்கிறார்கள். அந்த அரசியலுக்கு கருணாஸ் துணை போகக் கூடாது.
கருணாநிதி இல்லாத திமுக எப்படி இருக்கிறது?
வெறும் திராவிடம் மட்டும் உள்ளது. முன்னேற்றமும், கழகமும் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT