Published : 13 Sep 2018 09:03 AM
Last Updated : 13 Sep 2018 09:03 AM

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு சந்தை: கோயம்பேட்டில் குவிந்த பொதுமக்கள் 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு மலர் சந்தை வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள சிறப்பு சந்தையில், பூஜைப் பொருட்களை வாங்க பொதுமக்கள் நேற்று அதிக அளவில் குவிந்தனர்.

கோயம்பேடு சந்தை நிர்வாக குழு சார்பில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அனைத்து வகையான பூஜைப் பொருட்களும் ஒரே இடத்தில் மலிவு விலையில் கிடைப்பதற்காக மலர் சந்தை வளாகத்தில் சிறப்புச் சந்தை கடந்த 10-ம் தேதி திறக்கப்பட்டது. இங்கு பண்டிகைக்கு தேவையான அனைத்து பூஜை பொருட்களும் கிடைப்பதால், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நேற்று ஆயிரக் கணக்கான பொதுமக்கள் இச் சந்தையில் குவிந்ததால் அப்பகுதி யில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த சிறப்பு சந்தையில் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ரூ.100 முதல் ரூ.450 வரையும், சிலைக்கான குடை ரூ.10-க்கும் விற்கப்படுகிறது.

மேலும் ஒரு தேங்காய் ரூ.20 முதல் ரூ.30 வரையும், 400 கம்பு கதிர்கள் கொண்ட மூட்டை ரூ.250, 10 கதிர்கள் கொண்ட கட்டு ரூ.20, 5 தென்னை ஓலை தோரணங்கள் கட்டு ரூ.10, ஒரு வாழை இலை ரூ.6, பூசணிக்காய் ரூ.50, மக்காச் சோளக் கதிர் ரூ.10, அருகம்புல் ஒரு கட்டு ரூ.25, மாவிலை கொத்து ரூ.10, துளசி கட்டு ரூ.10, இரு வாழைக் கன்று ரூ.30, எருக்கம் பூ மாலை ரூ.10, சாமந்திப்பூ, மல்லிப்பூ, கனகாம்பரம்பூ முழம் ரூ.20, கதம்ப பூ முழம் ரூ.30, ஒரு படி பொரி ரூ.20, உடைத்த கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பொரி ஆகியவை கொண்ட தொகுப்பு ரூ.50, நாட்டு சர்க்கரை கிலோ ரூ.100, ஆப்பிள் கிலோ ரூ.140, சாத்துக்குடி ரூ.60, விளாம்பழம் ரூ.80, பேரிக்காய் ரூ.80, ஒரு சீப்பு வாழைப்பழம் ரூ.90, மாதுளை ரூ.100, 15 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.250, ஒரு கரும்பு ரூ.30 என விற்பனை செய்யப்படுகிறது. இதை ஏராளமான பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

சந்தையில் கரும்பு விற்பனை செய்யும் மதுரையைச் சேர்ந்த விவசாயி கே.முருகன் கூறும்போது, “இந்த ஆண்டு கரும்பு விளைச்சல் அதிகமாக இருப்பதால், அதிக அளவில் கரும்புகள் வந்துள்ளன. அதனால் ரூ.400-க்கு விற்க வேண் டிய 15 கரும்புகள் கொண்ட கட்டு, ரூ.250-க்கு விற்கப்படுகிறது” என்றார்.

சந்தையில் பொருட்களை வாங்க வந்திருந்த, அமைந்த கரை விஜய்- கீர்த்தனா தம்பதியர் கூறும்போது “ இந்த சந்தையில் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான அனைத்து பூஜை பொருட்களும் ஒரே இடத்தில், குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதனால் எங்களுக்கு சிரமம் குறைவதுடன், செலவும் மிச்சமாகிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x