Published : 07 Jun 2019 03:11 PM
Last Updated : 07 Jun 2019 03:11 PM
புதுக்கோட்டையில் நடை பயிற்சியில் ஈடுபட்ட இளைஞரை அடையாளம் தெரியாத 4 பேர் அரிவாளால் சரமாரியமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை, கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிங்கமுத்து மகன் சுரேஷ் பாண்டி(32). இவருக்கு திருமணமாகி மனைவியுடன் ஒரு குழந்தை உள்ளது. இவர் மீது புதுக்கோட்டை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், கடந்த 2015-ல் இவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.
இந்நிலையில் தனது நண்பர் ஆனந்துடன் சுரேஷ் பாண்டி இன்று (வெள்ளிக்கிழமை) திருவப்பூர் பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் சுரேஷ் பாண்டியை வழிமறித்து கையில் வைத்திருந்த அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதனால், தலை முற்றிலுமாக சிதைந்தது. இதையடுத்து அந்த இடத்திலேயே சுரேஷ் பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தடுக்க முயன்ற ஆனந்தும் காயம் அடைந்தார்.
இந்த சம்பவத்தைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு பல்வேறு திசைகளில் ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருக்கோகர்ணம் போலீஸார், சடலத்தை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டப்பகலில் ரவுடி ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக திருக்கோகரணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், முன்விரோதம் காரணமாக கூலிப்படையை வைத்து சுரேஷ் பாண்டியைக் கொலை செய்து இருக்கலாம் என போலீஸார் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT