Published : 27 Jun 2019 11:01 AM
Last Updated : 27 Jun 2019 11:01 AM
ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட மக்களைப் பாதிக்கும் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று புதுச்சேரி அரசைப் போல அறிவிக்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் மேலும் 104 இடங்களில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் திட்டங்களையே விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையாக எதிர்த்துவரும் நிலையில், இப்போது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக 104 கிணறுகள் அமைப்பதை ஏற்க முடியாது.
தொடர்ந்து இது பற்றி வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கும் மக்கள் விரோத அதிமுக அரசு, உடனடியாக தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட மக்களைப் பாதிக்கும் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று புதுச்சேரி அரசைப் போல அறிவிக்க வேண்டும்", என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT