Published : 05 Jun 2019 11:55 AM
Last Updated : 05 Jun 2019 11:55 AM

பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாகப் பயிற்றுவிக்க வேண்டும்: மோடிக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

பிற மாநிலங்களில், தமிழை விருப்ப மொழியாகப் பயிற்றுவிக்க வேண்டும் என, முதல்வர் பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

முந்தைய மத்திய பாஜக அரசு உருவாக்கிய புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை சமீபத்தில் பொதுமக்கள், கல்வியாளர்கள் கருத்துகளுக்காக வெளியிடப்பட்டது.

மும்மொழிக் கொள்கையைப் பரிந்துரைத்துள்ள அந்த அறிக்கையில், இந்தி பேசும் மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் பிறமொழி ஒன்றைக் கற்பிக்கவும், இந்தி பேசாத மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளைக் கற்பிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

இதனால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், இந்தி மொழி வலிந்து திணிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கொட்டையன் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தி பேசாத மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை கட்டாயமில்லை எனவும், அதாவது, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமில்லை என வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில், பிற மாநிலங்களில், தமிழை விருப்ப மொழியாகப் பயிற்றுவிக்க வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பிற மாநிலங்களில், தமிழை விருப்ப மொழியாகப் பயிற்றுவிக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்துகிறேன். அப்படி செய்வது, உலகின் மிக தொன்மையான மொழிகளில் ஒன்றுக்கு செய்யும் சேவையாகும்", என பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

பிற மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக சேர்க்க வேண்டும் என்றால், அதனை மூன்றாவது மொழியாகவே சேர்க்க முடியும். இதனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கின்றாரா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x