Published : 09 Jun 2019 12:00 AM
Last Updated : 09 Jun 2019 12:00 AM

நேர்மைக்கு கிடைத்த அங்கீகாரம்: 2-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற்ற ஈரோடு மாணவர்

சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை, பள்ளி ஆசிரியை மூலமாக காவல் துறையினரிடம் சேர்த்த, ஈரோடு மாணவர் முகமது யாசினின் நேர்மையை அங்கீகரித்து பாராட்டும் வகையில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை 2-ம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் பாடமாக சேர்த்துள்ளது.

ஈரோடு கனிராவுத்தர் குளம் நந்தவனத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாட்ஷா - அப்ரூத்பேகம் தம்பதியினரின் மகன் முகமது யாசின்(7). சின்னசேமூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதியன்று பள்ளி சென்றபோது, சாலையில் பணக்கட்டு கிடந்துள்ளது.

500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய அந்த நோட்டுக் கட்டினை தனதுபள்ளி ஆசிரியையிடம் கொடுக்க, தலைமையாசிரியை யாஸ்மின் மூலமாக ஈரோடு எஸ்.பி. சக்தி கணேசனிடம் அந்த பணம் ஒப்படைக்கப்பட்டது. 100 எண்ணிக்கையில், 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட அந்த பணக்கட்டில் ரூ.50 ஆயிரம் இருந்துள்ளது.

ரஜினிகாந்த் பாராட்டுபிறருக்கு சொந்தமான பணத்தை மறைக்கவோ, வைத்துக் கொள்ளவோ விரும்பாத முகமது யாசினின் நேர்மையைக் கண்டு வியந்த எஸ்.பி. சக்திகணேசன், சீருடை, புத்தகப்பை, காலணி ஆகியவற்றை வழங்கி பாராட்டு தெரிவித்தார். மாணவர் முகமது யாசினின் நேர்மைக்கு பலரும் பாராட்டு மழை பொழிந்தனர்.

நடிகை குஷ்பு, எஸ்.வி.சேகர், நடிகர் சூர்யா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும், முகமது யாசினின் தந்தை பாட்ஷாவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். யாசினின் கல்விச்செலவை ஏற்பதாக அவர்கள் தெரிவித்த நிலையில், ‘எனது மகன் அரசுப் பள்ளியில் படிப்பதையே நான் விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார் பாட்ஷா.

இந்நிலையில் ஈரோடு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மூலமாக இத்தகவலை அறிந்தரஜினிகாந்த், சிறுவன் முகமது யாசினையும், அவரது பெற்றோரையும் சென்னைக்கு அழைத்து பாராட்டுத் தெரிவித்தார். சிறுவனின் நேர்மையை பாராட்டும் வகையில் தங்க சங்கிலியை ரஜினி அளித்தார். மேலும், முகமது யாசினை சிறப்பாக வளர்த்துள்ளீர்கள் என பெற்றோருக்கு பாராட்டு தெரிவித்தரஜினி, ‘எப்போது உதவி தேவைஎன்றாலும் என்னை அணுகலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மாணவர் முகமது யாசினின் நேர்மையான செயலை அங்கீகரித்து பாராட்டும் வகையில், 2-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அவருக்கு இடம் வழங்கியுள்ளது. ஆத்திசூடியின் ‘நேர்ப்படஒழுகு’ என்ற வரிகளுக்கு பொருத்தமாக இந்த சம்பவத்தை படங்கள்மூலம் பாடப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஈரோடு எஸ்.பி.சக்திகணேசன் பாராட்டு தெரிவிக்கும் புகைப்படமும் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் தலைமை ஆசிரியர்மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x