Last Updated : 13 Jun, 2019 04:50 PM

 

Published : 13 Jun 2019 04:50 PM
Last Updated : 13 Jun 2019 04:50 PM

காற்றின் சீற்றத்தினால் சேதமாகும் வாழை இலைகள்: உற்பத்தி குறைந்து விலை அதிகரிப்பு 

காற்றின் சீற்றத்தினால் வாழை இலைகள் கிழிந்து அதிகளவில் சேதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் உற்பத்தி 50 சதவீதம் பாதிக்கப்பட்டு விலையும் அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் வாழை விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. குள்ளப்புரம், பெரியகுளம், ஜெயமங்கலம், ஓடைப்பட்டி, வயல்பட்டி, வீரபாண்டி, உப்பார்பட்டி, சின்னமனூர், ஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாழை ஆண்டு முழுவதும் பயிரிடப்பட்டு வருகின்றன. 8 மாதங்களில் பலன் தரும் வாழைமரத்தின் அடியில் புதிய சிம்புகள் உருவாகி புதிய மரம் வளரும். அவை பெரும்பாலும் இலைக்காக பயன்படுத்தப்படும்.

சக்கை, பூவன், கற்பூரவள்ளி, நாளிப்பூவன், பச்சை, நேந்திரம் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் இருந்தாலும் சக்கை ரக வாழை இலைகள் அதிகளவில் விரும்பப்படுகிறது. மெல்லிய, வெளிர்பச்சைத்தன்மை உள்ள இந்த இலைகள் பெரும்பாலும் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விசேஷங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. வாழை இலையின் தேவை ஆண்டு முழுவதும் இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் விவசாயிகள்  அன்றாட பணத்தேவைக்காக இதை வளர்த்து வருகின்றனர்.

200 இலைகள் கொண்ட கட்டு ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது தென்மேற்கு பருவக்காற்று தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக இதன் வீச்சு அதிகமாகியுள்ளது. இது வாழை இலை உற்பத்தியை வெகுவாய் பாதித்துள்ளது. காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் வாழை இலைகள் முற்றிலும் கிழிந்து நார்நாராக தொங்கிக் கொண்டிருக்கின்றன.

சாதாரண நிலையிலே இலையை பத்திரமாக கையாள வேண்டும். பறிப்பு, மடிப்பு, கட்டுதல் என்று பல்வேறு நிலைகளிலும் இதன் மெல்லிய தன்மை எளிதில் கிழிந்து விடும் என்பதால் குறிப்பிட்ட அளவு விரயமாவதும் வழக்கமாக இருக்கும்.

இந்நிலையில் வாழை மரத்திலே இலைகள் முற்றிலும் சேதமாகி தொங்கிக் கொண்டிருப்பதால் இலைகளை சந்தைக்கு அனுப்புவதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவற்றின் விலையும் ரூ.800 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து வாழை இலை பறிப்பு கூலித் தொழிலாளி ஆறுமுகம் கூறுகையில், "சிறுவயதில் கையறுப்பு என்று கத்தியை வைத்து இலைகளை அறுவடை செய்வோம். தற்போது தொரட்டி மூலம் இலை கிழியாமல் கவனமாக அறுக்க வேண்டியதுள்ளது. தற்போது இந்த காற்று இலைகளை வெகுவாய் கிழித்து விடுகிறது. இதனால் 50 சதவீத உற்பத்தி பாதித்துள்ளது. மீதமுள்ளவற்றை தரம் பிரித்து சந்தைக்கு அனுப்புகிறோம்.

ஓட்டல் போன்ற வணிக தேவை ஆண்டு முழுவதும் சீராக இருக்கும். முகூர்த்தம் போன்ற நேரங்களில் கூடுதல் விலை கிடைக்கும். தற்போது காற்றினால் உற்பத்தி பாதிக்கப்பட்டு சந்தைக்கு குறைவான இலையே செல்கிறது. இதனால் விலையும் தற்போது அதிகரித்து வருகிறது. அதிகாலையிலே தோட்டத்திற்குள் இறங்கி இலைகளை பறிப்போம். தினமும் 10 கட்டுகள் தயாராகும். தற்போது கிழிந்தது போக 5 கட்டுக்கள்தான் கிடைக்கிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x