Published : 19 Jun 2019 05:13 PM
Last Updated : 19 Jun 2019 05:13 PM
ராஜராஜ சோழன் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் முன்ஜாமீன் கோரிய வழக்கில் ரஞ்சித்தைக் கைது செய்வதற்கான தடையை வெள்ளிக்கிழமை வரை நீட்டித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனத் தலைவர் உமர்பாரூக்கின் நினைவு நாள் பொதுக்கூட்டம் ஜூன் 5-ல் நடைபெற்றது. இதில் மாமன்னர் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு இயக்குநர் பா. ரஞ்சித் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ''ராஜராஜ சோழன் குறித்து ஆயிரம் ஆண்டுகள் கழித்து பேச வேண்டிய அவசியம் என்ன? நாட்டில் பேசுவதற்கு நாட்டில் பல விஷயங்கள் இருக்கையில் மக்கள் கொண்டாடும் மன்னனை அவதூறாகப் பேசியது ஏன்?'' என நீதிபதி கேள்வி எழுப்பினார். ரஞ்சித்திற்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என வழக்கறிஞர் முத்துக்குமார் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது ரஞ்சித்திற்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்துள்ள மனுவில் சில குறைபாடுகள் இருப்பதாகவும், அதை சரி செய்து புதிய மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 21-க்கு நீதிபதி ஒத்திவைத்தார். அதுவரை ரஞ்சித்தை கைது செய்யக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT