Published : 20 Mar 2018 02:45 PM
Last Updated : 20 Mar 2018 02:45 PM

ராம ராஜ்ய ரத யாத்திரைக்கும் பாஜக விஷ்வ இந்து பரிஷத்துக்கும் சம்பந்தமில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

ராம ராஜ்ய ரத யாத்திரை ஊர்வலம் நடத்துவது தனி அமைப்பு. அதற்கும் விஎச்பி, பாஜகவுக்கும் சம்பந்தமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ஆதரவுடன்  உத்தரப் பிரதேசத்திலிருந்து ராம ராஜ்ய ரத யாத்திரை தொடங்கியது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த யாத்திரையைத் தொடங்கி வைத்தார். ராம ஜென்ம பூமியில் ராமர் கோயில், ராம ராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ரத யாத்திரை பல மாநிலங்கள் வழியாக தமிழகம் வந்து சேர்கிறது. கன்னியாகுமரியில் இந்த ரத யாத்திரை நிறைவு பெறுகிறது.

இதைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் எதிர்ப்பியக்கம் நடத்தி கைதாகி வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் விஎச்பிக்கும் ரத யாத்திரைக்கும் சம்பந்தமில்லை என்று கூறி அதிர்ச்சியூட்டினார்.

இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

தமிழகத்தில் விஎச்பி நடத்தும் ராமராஜ்ய யாத்திரைக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறதே?

ராமராஜ்ய ரத யாத்திரை தனி அமைப்பு நடத்துகிறது.

இந்தியா என்பது மதச் சார்பற்ற நாடு. எந்த மதம் சார்ந்தவர்களும் ஊர்வலம் செல்லலாம். கூடாது என்று கூற முடியாது. இது இந்து அமைப்புகள் அல்ல, ராமதாஸா மிஷன் சொசைட்டி என்ற அமைப்பு ரத யாத்திரை நடத்துகின்றனர்.

அவர்கள் எல்லா மாநிலத்துக்கும்தான் செல்கிறார்கள். அங்கெல்லாம் பிரச்சினை வரவில்லையே. இங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்குவது தவறு. அதனால் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்கிறோம்.

144 தடை உத்தரவு ரத யாத்திரைக்கும் பொருந்துமா?

144 என்பது ஒரு குழுவாக கூடி சட்டம் ஒழுங்குக்கு பிரச்சினை ஏற்படும் என்ற நிலையில் போடப்பட்டுள்ளது. ரத யாத்திரையைப் பொறுத்தவரை அவர்கள் முன் அனுமதி பெற்று வருகிறார்கள். இவர்கள் பாட்டுக்கு இவர்கள் வேலையை பார்த்தால் அவர்கள் பாட்டுக்கு அவர்கள் போய்விடுவார்கள். ராமேஸ்வரம் போய்விட்டு கன்னியாகுமரி போய்விட்டு சொந்த ஊருக்குப் போய் விடுவார்கள்.

இந்த ரத யாத்திரைக்கும் விஷ்வ இந்து பரிஷத்துக்கும், ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்கும் சம்பந்தமில்லை. அவரவர்கள் மதத்தை வழிபட உரிமையுண்டு.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x