Published : 02 Sep 2014 12:20 PM
Last Updated : 02 Sep 2014 12:20 PM
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திர மேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தனஞ்சேரி கிராமப் பகுதியில் உள்ள பாலாற்றுப் படுகையில், லாரிகள் மூலம் பகலிலேயே மணல் கடத்தப்படுவதாகவும், மணல் லாரிகளால் குடிநீர் குழாய்கள் சேதம் அடைவதாகவும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரனிடம் திங்கள்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புகார் மனு அளித்த சாத்தனஞ்சேரி கிராம மக்கள் கூறியதாவது: ‘உத்திர மேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தனஞ்சேரி கிராமப் பகுதியில் உள்ள பாலாற்றுப் படுகையில், பட்டப் பகலிலேயே லாரிகளில் மணல் கடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த மணல் லாரிகளால் சாத்தனஞ்சேரி, காவித்தண்டலம், ஒரக்காட்பேட்டை ஆகிய கிராமங் களுக்கு குடிநீர் வழங்கும் குழாய்கள் சேதமடைந்து வருகின்றன.
மணல் கடத்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆகியோரிடம் ஏற்கெனவே மனு அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவே இல்லை. லாரிகளில் மணல் கடத்தல் நடந்து கொண்டிருக்கும்போதே அப்பகுதியில் உள்ள போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாலும், அவர்கள் சம்பவ இடத்துக்கு வருவதே இல்லை.
தொடர் மணல் கடத்தலால் அப்பகுதியில் உள்ள இருளர் சுடுகாடு காணாமல் போய்விடும் நிலை உள்ளது. மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டால், கிராமப் பகுதிக்கு குடிநீர் வழங்கும் குழாய்களை பாதுகாக்க முடியும். அதனால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரனிடம் மனு அளித்துள்ளோம்’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT