Published : 05 Mar 2018 09:09 AM
Last Updated : 05 Mar 2018 09:09 AM
சென்னை மாநகராட்சியில் பல மாதங்களாக பழுதடைந்து கிடந்த 2 ஆயிரத்து 917 சாலைகளை ரூ.200 கோடியில் சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
சென்னை மாநகராட்சியில் 387 கிமீ நீளத்தில் பேருந்து தடச் சாலைகளும், 5 ஆயிரத்து 623 கிமீ நீளம் கொண்ட உட்புற சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நவம்பர் மாத தொடக்கத்தில் பெய்த கனமழையால், அவற்றில் மழைநீர் தேங்கியது.
இதில் பல சாலைகள் சேதமடைந்தன. மேலும் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கழிவுநீர் குழாய் பதிப்பு மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள், மி்ன் வாரியம் சார்பில் தோண்டப்பட்ட சாலைகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகள் சேதமடைந்திருந்தன.
சென்னை மாநகராட்சியில் நிலவிய நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த சாலைகள் பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் இருந்தன. அதனால் அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின. இந்நிலை யில் தற்போது ரூ.200 கோடியில் இந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “மாநகராட்சியில் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் சாலைகளை உடனுக்குடன் சீரமைக்க முடியவில்லை. தற்போது தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், மாநகராட்சி பகுதியில் உள்ள 15 பேருந்து தடச் சாலைகள், 2 ஆயிரத்து 902 உட்புறச் சாலைகள் என மொத்தம் 2 ஆயிரத்து 917 சாலைகளை சீரமைக்க ரூ.200 கோடியே 17 லட்சம் நிதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த நிதியில் தற்போது சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT