Published : 27 Mar 2018 09:23 AM
Last Updated : 27 Mar 2018 09:23 AM

பெருந்துறை திமுக மாநாட்டு திடலில் 117 ஜோடிகளுக்கு சுயமரியாதை திருமணம்

ஈரோடு மண்டல திமுக மாநாடு நடந்த திடலில், மாநாட்டுக் குழு சார்பில் 117 ஜோடிகளுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று சுயமரியாதை திருமணம் செய்து வைத்தார்.

ஈரோடு மண்டல திமுக மாநாடு கடந்த 24, 25-ம் தேதிகளில் பெருந்துறையை அடுத்த சரளையில் நடந்தது. இதன் தொடர்ச்சியாக, மாநாட்டுக் குழுவின் சார்பில், 117 ஜோடிகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மணமக்களுக்கு பட்டு வேட்டி, சேலை மற்றும் கால் பவுன் தங்கத்தில் தாலி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மணமக்கள் அனைவரும் மேடையில் அமர வைக்கப்பட்டனர். ஸ்டாலின் மேடைக்குச் சென்று தாலியை எடுத்துக் கொடுத்தார். திருமணம் முடிந்ததும் மணமக்களுக்கு அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்த பிறகு, ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்தனியாக, ரூ.15 ஆயிரம் அடங்கிய மொய் பணத்தையும் அவர் வழங்கினார்.

விழாவில் அவர் பேசியது: ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 117 ஜோடிகளுக்கு இங்கு திருமணம் நடந்துள்ளது. நாட்டில் ஒரு நல்ல சூழல் ஏற்படும் வகையில், இந்த சுப நிகழ்ச்சி நடக்கிறது. இங்கு மண்டல மாநாடு நடந்தாலும், மாநில மாநாட்டை மிஞ்சும் வெற்றி மாநாடாக நடந்து முடிந்துள்ளது. 2 நாட்கள் நடந்த திமுக மண்டல மாநாட்டின் வெற்றியை எவராலும் மறைக்க முடியாது. இந்த மாநாட்டில் கருணாநிதி பங்கேற்க முடியவில்லை என்றாலும், தொலைக்காட்சி மூலம் நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து இருப்பார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x