Published : 04 Mar 2018 10:16 AM
Last Updated : 04 Mar 2018 10:16 AM

இந்த ஆண்டில் முதன்முதலாக சேலத்தில் 100 டிகிரி வெயில் பதிவு

இந்த ஆண்டில் முதன்முதலாக சேலத்தில் நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

இந்த ஆண்டு தமிழகத்தில் இயல்பை விட 0.5 செல்சியஸ் வெயில் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அண்டை மாநிலங்களான கர்நாடகம் மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வருகிறது. அங்கு பல நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியுள்ளது. ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 95 டிகிரிக்கு குறைவாகவே வெயில் இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு கோடை வெயிலில் சதம் அடித்த முதல் நகரம் என்ற பெயரை சேலம் பெற்றுள்ளது. அங்கு நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

சனிக்கிழமை மாலை எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி, சேலத்தில் அதிகபட்சமாக 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இந்த மாதத்தில் வழக்கமாக பதிவாகும் வெப்பநிலையை விட இது 2 டிகிரி செல்சியஸ் அதிகம். மேலும் கோவை மற்றும் கரூர் பரமத்தியில் தலா 98.6, மதுரை 98.24, தருமபுரி மற்றும் திருத்தணியில் தலா 98.06, திருச்சி 96.62, வேலூர் 96.44 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் 97.16, நுங்கம்பாக்கத்தில் 94.46 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x