Published : 24 May 2019 12:00 AM
Last Updated : 24 May 2019 12:00 AM
தொடர்ந்து 18 ஆண்டுகளாக அதிமுக வசம் இருந்த திருப்பரங்குன்றம் தொகுதியை திமுக கைப்பற்றியுள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்த ஏ.கே.போஸ் உடல்நலக் குறைவால் இறந்ததையடுத்து, இந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் திமுக சார்பில் டாக்டர் சரவணன், அதிமுக சார்பில் முனியாண்டி, அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி சார்பிலும் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
திருப்பரங்குன்றம் தொகுதி இதுவரை 15 தேர்தல்களை சந்தித்துள்ளது. இத்தொகுதியில் 1957, 1962-ல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இவ்விரு தேர்தல்களிலும் காங்கிரஸ் வேட்பாளர் சின்னகருப்பத்தேவர் வெற்றி பெற்றார். 1967-ல் திமுக சார்பில் அக்னிராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1971-ல் திமுக சார்பில் காவேரிமணியம் வெற்றி பெற்றார்.
1977-ல் முதல் முறையாக திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட காளிமுத்து வெற்றி பெற்றார். 1980 தேர்தலில் காளிமுத்து மீண்டும் வென்றார். 1984-ல் அதிமுக சார்பில் மாரிமுத்து வெற்றி பெற்றார்.
1989-ல் திருப்பரங்குன்றம் மீண்டும் திமுக வசமானது. அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் செ.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். 1991-ல் பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்த ஆண்டித்தேவரும், 1996 தேர்தலில் திமுக வேட்பாளர் செ.ராமச்சந்திரனும் வெற்றி பெற்றனர். 2001, 2006-ல் அதிமுகவும், 2011-ல் அதிமுக கூட்டணியில் தேமுதிகவும் வென்றது.
2016-ல் அதிமுக வேட்பாளர் சீனிவேல் வெற்றி பெற்றார். அவர் எம்எல்ஏவாக பதவியேற்பதற்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்ததால், 2016 நவம்பரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அப்போது திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் தோல்வி அடைந்தார். போஸ் மரணம் அடைந்ததையடுத்து இப்போது நடந்த இடைத்தேர்தலில் டாக்டர் சரவணன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக 7 முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் 2, பார்வர்டு பிளாக், தேமுதிக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. திருப்பரங்குன்றம் தொகுதியில் 18 ஆண்டுக்குப் பிறகு திமுக மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT