Published : 27 May 2019 04:33 PM
Last Updated : 27 May 2019 04:33 PM
கோவையில் வீட்டு வரி புத்தகம் கொடுக்க லஞ்சம் வாங்கிய மாநகராட்சி உதவி ஆணையர் உள்ளிட்ட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை கணபதி நல்லாம்பாளையத்தைச் சேர்ந்தவர் குமார் (32). இவர் அதே பகுதியில் தரைத்தளம், முதல் தளம் கொண்ட வீட்டைக் கட்டியுள்ளார். அதற்கு சொத்து வரி புத்தகம் பெற, மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். சொத்து வரி புத்தகம் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சத் தொகையாக தருமாறு உதவி ஆணையர் ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ரூ.12 ஆயிரம் தருமாறு கூறியுள்ளார். அந்தத் தொகையை வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்த தரகர் பாலகிருஷ்ணனிடம் (59) வழங்குமாறு கூறியிருந்தார். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததால் குமார் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரை அணுகி புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை குமாரிடம் கொடுத்தனர்.
அந்தத் தொகையை இன்று (திங்கள்கிழமை) காலை குணசேகரனிடம் குமார் கொடுத்தார். பணத்தை பாலகிருஷ்ணன் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரைக் கைது செய்தனர். அவரிடம் லஞ்சத் தொகையை வாங்கக் கூறிய மாநகராட்சி வடக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமாரையும் போலீஸார் கைது செய்தனர். இருவரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT