Published : 30 May 2019 04:33 PM
Last Updated : 30 May 2019 04:33 PM

எந்தவொரு சமூகத்திற்கும் நான் எதிரானவன் இல்லை: திருமாவளவன்

எந்தவொரு சமூகத்திற்கும் தான் எதிரானவன் இல்லை என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தொல்.திருமாவளவன் இன்று (வியாழக்கிழமை) சந்தித்தார். அதன்பின், செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசியதாவது:

"கூட்டணிக் கட்சிகளின் வெறிக்காக வேல்முருகன் தீவிரமாகப் பணியாற்றினார். அதேபோன்று விசிக போட்டியிட்ட இரு தொகுதிகலிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொண்டர்கள் தேர்தல் பணியாற்றி, வெற்றிக்காக அரும்பாடுபட்டனர்.

வன்னியர் சமூகம் உட்பட மற்ற சமூகத்தினருக்கு நான் எதிரி என்பது போன்ற தோற்றத்தை ஆதாய அரசியல் செய்யும் சிலர் திட்டமிட்டுப் பரப்பி வந்தார்கள். ஆனாலும், அந்த அவதூறுப் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டு, அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த வன்னியர் சமூக மக்களும் தலித் அல்லாத, கிறிஸ்தவர் அல்லாத, இஸ்லாமியர் அல்லாத பிற சமூக மக்களும் மனமுவந்து வாக்களித்ததன் விளைவாகத்தான், சிதம்பரம் தொகுதியில் நான் 5 லட்சத்து 229 வாக்குகள் பெற்று வெற்றிபெற முடிந்தது.

திமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த வன்னியர் சமூக பொறுப்பாளர்கள், இந்த இரு தொகுதிகளிலும் கடும் நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்தது. சாதி பெயரைச் சொல்லியே அவர்களை இழிவுபடுத்தினார்கள்.

திருமாவளவனுக்கும், ரவிக்குமாருக்கும் எப்படி வாக்கு சேகரிக்கலாம் என அவமானப்படுத்தினார்கள். அதனை முறியடித்து அவர்கள் அரும்பாடுபட்டார்கள். என்றென்றைக்கும் விசிக நன்றியுணர்வோடு அதனைப் பாராட்டும். எந்தவொரு சமூகத்திற்கும் நான் எதிரானவன் இல்லை" என, திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x