Published : 19 May 2019 07:51 AM
Last Updated : 19 May 2019 07:51 AM

அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை ஒருநாள் முன்னதாக நேற்று தொடங்கியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:

ஏற்கெனவே 19-ம் தேதி வாக்கில் அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி, தெற்கு அந்தமான் கடல் பகுதி, தெற்கு வங்கக் கடலின் சில பகுதிகள், நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றில் நேற்று, சற்று முன்னதாக தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

அங்கு நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேகக்கூட்டங்கள் உருவாகியுள்ளன. அதன் தாக்கத்தால் மழையும் பெய்து வருகிறது. தெற்கு இந்திய கடல் பகுதியில் இருந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சியை நோக்கி காற்று, வந்துகொண்டிருக்கிறது. இந்த நிகழ்வுகள் அடிப்படையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது அடுத்த சில தினங்களில் தெற்கு வங்கக் கடல், வடக்கு அந்தமான் கடல், அந்தமான் தீவுகளை நோக்கி நகர்ந்து செல்லும். பின்னர் ஏற்கெனவே அறிவித்தபடி, அரபிக் கடல் வழியாகச் சென்று, ஜூன் 6-ம் தேதி கேரளாவில் பருவமழையாக தொடங்கும்.

தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங் களில் சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிக பட்சமாக கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை ஆகிய இடங் களில் தலா 4 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப் பாறை, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x