Published : 28 May 2019 06:41 PM
Last Updated : 28 May 2019 06:41 PM
கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் கணிசமான வெற்றியைத் குவித்த கமல்ஹாசனுக்கு தான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தன் கட்சி போட்டியிடும் என்றும் தெரிவித்தார். அவர் அறிவித்த இரண்டு மாதங்களில் கமல் அரசியல் அறிவிப்பை வெளியிட்டு முழுவீச்சில் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார்.
மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்து மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்து சுற்றுப்பயணம் செய்தார். அதிமுக, பாஜகவினர் அவரை கடும் விமர்சனம் செய்தனர். மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார். பல இடங்களில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து ஓரளவு வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை மக்கள் நீதி மய்யம் பிடித்தது.
தென்சென்னையில் அதிகபட்சமாக 1.40 லட்சம் வாக்குகள் வரை பெற்றது. கமலின் மக்கள் நீதி மய்யத்துக்கு கிடைத்த அதிக வாக்குகள் ரஜினிகாந்த் போன்றோரைச் சிந்திக்கத் தூண்டியது. தேர்தலுக்குப் பின்னர் ரஜினி தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று மும்பைக்குச் செல்லும்முன் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அப்போது கமல்ஹாசன் மக்களவைத் தேர்தலில் மூன்றாவது இடம் பிடிக்கும் அளவுக்கு வாக்குகள் பெற்றது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் சற்றும் தயங்காமல், “கட்சி தொடங்கிய 14 மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் 4% வாக்குகள் வாங்கியிருப்பது என்பது கணிசமான வாக்குகள். கமலுக்கு என் பாராட்டுகள்” என்று தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT