Published : 29 Apr 2019 12:00 AM
Last Updated : 29 Apr 2019 12:00 AM
கோடை விடுமுறையை முன்னிட்டு வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை கடந்த இரு தினங்களாக அதிகரித்துள்ளதால் கன்னியாகுமரி களைகட்டியது.
சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சபரிமலை சீஸன், மற்றும் கோடை விடுமுறை சீஸனில்அதிகமானோர் கூடுவர். இது தவிர அரசு விடுமுறை நாட்கள், பண்டிகை தினங்கள், வார இறுதி நாட்களிலும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை புரிவர்.
தற்போது கோடை விடுமுறை தொடங்கி 3 வாரங்களுக்கு மேலான நிலையில், குழந்தைகளுடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். அதே நேரம் வடமாநிலங்கள் மற்றும் கேரளாவில் மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமைக்கு பின்னர் வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகையின்றி கன்னியாகுமரி வெறிச்சோடியது. இதனால் சுற்றுலா துறையினர் மற்றும் தனியார் வர்த்தகர்கள் கவலை அடைந்தனர்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக வெளிமாநில சுற்றுலாபயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கோடை விடுமுறையை கொண்டாடும் விதமாக குழந்தைகளுடன் ஏராளமானோர் வருகை புரிகின்றனர். கேரள சுற்றுலா பயணிகளும் குவிந்ததால் கன்னியாகுமரியில் கோடை சீஸன் மீண்டும் களைகட்டியுள்ளது.
திற்பரப்பு நீர்வீழ்ச்சி, பத்மநாபபுரம் அரண்மனை, உதியகிரிகோட்டை, மாத்தூர் தொட்டிப்பாலம், வட்டக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா மையங்கள் அனைத்திலும் வெளிமாநில பயணிகள் உலா வருகின்றனர்.
இதுகுறித்து கன்னியாகுமரி முக்கடல் சங்கமப் பகுதி வியாபாரிகள் கூறும்போது, ‘‘கோடை சீஸன் தொடங்கிய பின்னர் ஒரு வாரம் நல்ல கூட்டம் இருந்தது. அதன் பிறகு வடமாநிலங்களில் தேர்தலால் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடியது. இந்நிலையில் மீண்டும்கோடை சீஸன் களைகட்டியுள்ளதால் தங்கும் விடுதி, உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள் நல்லவருவாய் ஈட்டி வருகின்றன. புயல்எச்சரிக்கை இருந்தபோதும் இருநாட்களாக வெயில் கொளுத்துவதால் இளநீர், குளிர்பானங்களை சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்குகின்றனர் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT