Published : 17 Apr 2019 02:26 PM
Last Updated : 17 Apr 2019 02:26 PM

ஓபிஎஸ் குடும்பத்தினர் பணம் விநியோகித்ததற்கான வீடியோக்கள் உள்ளன: தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு

ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் வாக்காளர்களுக்கு 1,000 ரூபாய் கொடுத்ததற்கான வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன என, அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.

தேனி தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அமமுக அலுவலகத்திலிருந்து பணம் கைப்பற்றப்பட்டுள்ளதே?

தேர்தல் ஆணையம் விதிமுறைப்படி, பிரச்சாரம் முடிந்த பிறகு பேட்டி கொடுக்கக் கூடாது. எனினும், எங்கள் மீது தவறான குற்றச்சாட்டு வந்ததாலேயே விளக்குகிறேன். அந்த வணிக வளாகம் அதிமுகவினருடையது. அதற்கு கீழ் அமமுகவின் ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமாரின் அலுவலகம் இருக்கிறது. அந்த அலுவலகத்திற்கும் சோதனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அந்த வணிக வளாகத்தின் மாடியில் உள்ள அறையில் தான் பணம் கைப்பற்றப்பட்டது. அதிமுகவின் தேனி வேட்பாளர் வாக்காளர்களுக்கு 1,000 ரூபாய் பணம் கொடுப்பதாக ஆட்சியர் உட்பட அனைவரிடமும் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அதிமுகவினரின் வணிக வளாகத்தில் வைத்து நாங்கள் எப்படி பணம் விநியோகிப்போம்? அதிமுகவினரே அங்கு பணத்தை வைத்து ஜோடித்து நடித்த நாடகம் இது. எங்கள் மீது குற்றச்சாட்டு வர வேண்டும் என்பதற்காக செய்துள்ளனர். மக்கள் இதனை நம்ப மாட்டார்கள்.

கைதான 4 பேர் யார்?

4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது உண்மை. அவர்கள் யாரென்ற விவரம் தெரியவில்லை. எஃப்ஐஆர் கேட்டும் தர மறுக்கின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்களே?

இதுவரை அதிமுக 150 கோடி ரூபாய் பணம் விநியோகித்துள்ளது. ஏன் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது என தெரியவில்லை. ஆனால், வருமான வரித்துறையினர் பணம் எடுக்க சங்கடப்பட்டதாகத் தெரிகிறது. மின்விளக்கை அணைத்துவிட்டு அங்கு பணம் வைக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால், அந்த வளாகத்தில் பணத்தை முட்டாள் நபர்கள் கூட வைக்க மாட்டார்கள். மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது பணத்தை எடுத்தார்கள். மின்விளக்கு அணைக்கப்பட்டது ஏன் என தெரியவில்லை.

உங்களை தேர்தல் ஆணையம் விசாரணைக்கு அழைத்ததா?

இதுவரை அழைக்கவில்லை.

இது அமமுகவின் பணம் என வருமான வரித்துறை உறுதி செய்துள்ளதே?

வருமான வரித்துறை திட்டமிட்டு நாடகம் ஆடுகிறது என நினைக்கிறேன். வேண்டுமென்றே ஒரு நபரை அப்ரூவராக மாற்றி இப்படி ஒரு வாக்குமூலம் வாங்கி கொடுத்திருக்கலாம். எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.

இதை யார் செய்திருப்பார்கள் என  நினைக்கிறீர்கள்?

அதிமுகவுக்கு தோல்வி பயம். பிறகு, யார் இதனை செய்திருப்பார்கள்?

அதிமுக மீது புகார் கொடுப்பீர்களா?

நாங்கள் ஏன் புகார் கொடுக்க வேண்டும்? விசாரணை வரட்டும், சந்திக்கிறோம். இந்தப் பணத்தை யார் வைத்தது, யார் எடுத்தது என அப்பட்டமாகத் தெரிகிறது. அமமுக தான் வைத்தது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?

அமமுகவினர் 150 பேர் மீது வழக்கு போட்டுள்ளார்களே?

தேர்தல் நாளன்று பூத் கமிட்டியிலுள்ள எங்கள் ஆட்களைக் கைது செய்வதற்காக இருக்கலாமோ என்று தோன்றுகிறது. எங்கள் ஆட்கள் உட்கார முடியாத அளவுக்கு எஃபஐஆர போட்டுவிட்டால், எளிதில் கைது செய்யலாம் என்பதற்காக. காவல்துறை ஓபிஎஸ் கட்டுப்பாடில் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

உங்கள் புகாருக்கு நடவடிக்கை உண்டா?

தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஓபிஎஸ் சொல்வது தான் நடக்கிறது. தேர்தல் கமிஷன், போலீஸ் இருப்பதாகத் தெரியவில்லை. அதிமுக திட்டமிட்டு செய்த சதி இது. ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் 1,000 ரூபாய் கொடுத்ததற்கான வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், அதை வைத்து யாரையும் கைது செய்ய மாட்டார்கள்.

இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x