Published : 11 Apr 2019 05:18 PM
Last Updated : 11 Apr 2019 05:18 PM

முதல்வராக வேண்டும் என்பது என் கனவு: பவர் ஸ்டார் சீனிவாசன்

முதல்வராக வேண்டும் என்பது என் கனவு என்று பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இந்திய குடியரசுக் கட்சி சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார் பவர் ஸ்டார் சீனிவாசன். தான் தேர்தலில் வெற்றிபெற்று மத்திய அமைச்சர் ஆவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் சீனிவாசன் கூறியதாவது:

 ''இந்திய குடியரசுக் கட்சியின் அகில இந்தியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலேதான்  நான் தென் சென்னையில் போட்டியிடக் காரணம். மாநிலத் தலைவர் சூசை முன்னிலையில் கட்சியில் சேர்ந்து துணைத் தலைவராக இருக்கிறேன்.

பிரச்சாரத்துக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. எனக்கு 5 நாட்கள் தேவையில்லை. ஒரு நாள் இருந்தாலே போதும். தொகுதி முழுக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்வேன். தேர்தலில் அமோக வெற்றியும் பெறுவேன்.

ஏற்கெனவே 100 பேரைத் தொகுதிக்கு அனுப்பி ஆய்வு செய்யச் சொல்லி இருக்கிறோம். அது கடந்த 15 நாட்களாக நடந்து வருகிறது. பெரிய கட்சிகள் களத்தில் உள்ளன. நாங்கள் புதிதாக வந்திருக்கிறோம்.

மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். எங்களால் மாற்றம் நிகழும் என்று நம்புகிறோம். கண்டிப்பாக நாங்கள் வெல்ல நிறைய அறிகுறிகள் உள்ளன. நடிகர், அரசியல்வாதி என்று இரண்டுமே எனக்குப் பிடித்திருக்கிறது.

போன படத்தில் மத்திய அமைச்சராக நடித்தேன். அது நிழல். அப்போது எனக்கு ஆசை வந்தது. ஒரு படத்தில் முதல்வராக நடித்தேன். நாம் இதுபோல வரமாட்டோமா என்று கனவு இருந்தது. இப்போது அரசியலில் அவை நிஜமாகப் போகிறது. அதற்காகக் களத்தில் இறங்கி இருக்கிறேன்.

நடிப்பும் அரசியலும் எனது இரு கண்கள். இப்போது பிரச்சாரத்துக்கு அவகாசம் போதவில்லை என்று கருதினால் தேர்தல் ஆணையத்திடம் 1 மாதம் கேட்டு கோரிக்கை வைப்பேன். கிடைக்கவில்லையென்றால் காஷ்மீரில் போட்டியிடுவேன். ஏதாவது ஒரு தொகுதியில் எம்.பி. ஆக வேண்டியதுதான்''.

இவ்வாறு பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x