Last Updated : 12 Mar, 2019 01:43 PM

 

Published : 12 Mar 2019 01:43 PM
Last Updated : 12 Mar 2019 01:43 PM

தினகரன் புது வியூகம்: ஒரே கல்லில் இரண்டு மாங்காய்? - குறிவைக்கும் 7 தொகுதிகள்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து காலியாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது. இத் தேர்தலுடன் 18 சட்டப்பேர்வை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அங்கு இப்போது தேர்தல் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிமுகவைப் பொறுத்தவரை, 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 10க்கும் அதிகமான  தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில், திருப்போரூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், சோளிங்கர், ஆம்பூர், குடியாத்தம், ஒசூர் ஆகிய தொகுதிகளுக்கு பாமகவுக்கும் கணிசமான வாக்கு வங்கி உள்ளது.

இந்தத் தொகுதியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளதால் வட மாவட்டங்களில் பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவைத் தொகுதியையும் கொடுத்து அதிமுக கூட்டணியை உறுதி செய்ததாக தகவல் வெளியாகியது.

வட மாவட்டங்களைப் போலவே, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், பரமக்குடி, மானாமதுரை, நிலக்கோட்டை, விளாத்திகுளம், சாத்தூர் ஆகிய 7 தொகுதிகளிலும் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மற்ற இரு தென் மாவட்ட தொகுதிகளான திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரத்தில் தற்போது தேர்தல் நடைபெறவில்லை. வட மாவட்டங்களைப் போலவே, தென் மாவட்டங்களில் உள்ள 7 தொகுதிகள் இடைத்தேர்தலும் அதிமுகவுக்கு மிக முக்கியம்.

தென் மாவட்ட தொகுதிகளைப் பொறுத்தவரை தினகரனின் அமமுகவுக்கு கணிசமான செல்வாக்கு உள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி உள்ளது.

தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனைத் தவிர, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பரமகுடி சட்டப்பேரவைத் தொகுதியிலும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குப்பட்ட மானாமதுரையிலும், திண்டுக்கல் தொகுதிக்குப்டபட்ட நிலக்கோட்டையிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

அதபோலவே,  விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சாத்தூரிலும், தூத்துக்குடி தொகுதி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

எனவே தென் மாவட்டங்களில் தங்களுக்குக் கணிசமான வாக்கு வங்கியுள்ள தேனி, திணடுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த தினகரன் தரப்பு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் அந்த மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவதுடன், அதற்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக அரசு தொடராமல் தடுக்க முடியும் என தினகரன் நம்புவதாகத் தெரிகிறது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதுடன், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் அதிமுக அரசுக்கு நெருக்கடி தரவும் முடியும். எனவே தென் மாவட்ட தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு அவர் அறிவுத்தியுள்ளதாகத் தெரிகிறது. அதற்கு ஏற்ப அமமுகவின் வியூகம் மற்றும் பிரச்சாரங்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x