Published : 12 Mar 2019 01:29 PM
Last Updated : 12 Mar 2019 01:29 PM

3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த திமுக முறையீடு: அவசர வழக்காக விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத் தேர்தல் நடத்த உத்தரவிடவேண்டும் என்று  திமுக வைத்த முறையீட்டை உச்சநீதிமன்றம் ஏற்றது, வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 பேர் முதல்வர் எடப்பாடி அரசுக்கு எதிராக கடிதம் கொடுத்ததாக கொறடா அளித்த புகாரில் சட்டப்பேரவைத்தலைவர், அவர்களை தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று பின்னர் உயர் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டு நீக்கம் உறுதியானது.

அவர்கள் நீக்கத்தால் 18 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதேபோன்று திருவாரூர் எம்எல்ஏ திமுக தலைவர் கருணாநிதி, திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ் ஆகியோர் மறைவை ஒட்டி இரு தொகுதிகளும், ஓசூர் சட்டப்பேரவைத் உறுப்பினர் பாலகிருஷ்ண ரெட்டி தகுதியிழப்புக் காரணமாக அந்த் தொகுதியும் சேர்ந்து 21 தொகுதிகள் இடைத்தேர்தல் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இதனிடையே தேர்தல் அறிவிக்கப்பட்டதில் திடீரென 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் என அறிவிப்பு வெளியானது. அரவக்குறிச்சியில் சுயேச்சை வேட்பாளர் கீதா என்பவர் இரு கட்சிகளும் காசுகொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கிவிட்டார்கள் என வழக்குப்போட்டிருப்பதாகவும், ஒட்டப்பிடாரத்தில் 400 வாக்குகளில் தான் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ளாத கிருஷ்ணசாமி வழக்குப்போட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் மேற்கண்ட மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. திமுக மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தில், “வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மூன்று தொகுதி இடைத் தேர்தல்களை நடத்தவில்லை” என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பதற்கு எவ்வித முகாந்திரமோ, ஆதாரமோ, அடிப்படையோ இல்லை.

குறிப்பாக அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவைத் தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அந்த தகுதி நீக்கம் ஏற்கனவே உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இறுதிக்கு வந்துவிட்டது. அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் தொடர்பாக தொடரப்பட்டுள்ள வேறு தேர்தல் வழக்குகளில் “தேர்தலை நடத்தக் கூடாது என்று எவ்வித தடையுத்தரவும் தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தல் வழக்கிலும் அவ்வாறு தடையுத்தரவு ஏதும் இல்லை. ஆகவே இந்த மூன்று தொகுதிகளிலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது அப்பட்டமான வாக்காளர் விரோத நடவடிக்கை’’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மூன்று தொகுதிகளிலும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்தே இத்தேர்தலை நடத்திடவேண்டும் என திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது. அதேபோன்று இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் முறையீடு ஒன்று செய்யப்பட்டது.

திமுக சார்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி முறையீட்டை தாக்கல் செய்தார்.அவரது முறையீட்டில் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் 3 தொகுதிகளை நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி ஒத்திவைப்பது சரியல்ல 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிட்டார்.

வழக்கை விசாரணைக்கு தலைமை நீதிபதி அமர்வு ஏற்றது. வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வழக்கில் தலைமை தேர்தல் ஆணையமும், தமிழக தேர்தல் அதிகாரியும் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுவார்கள் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x