Published : 04 Mar 2019 02:47 PM
Last Updated : 04 Mar 2019 02:47 PM
வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக மதுரையை சேர்ந்த தினேஷ்பாபு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகும் நிலையில் பொதுமக்களுக்கு சிறப்பு நிதி வழங்குவது ஓட்டுக்காக லஞ்சம் கொடுப்பது ஆகும்.
இதனால், நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை ரூ.2,000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைத்து, தேர்தல் முடிந்ததும் உண்மையான பயனாளிகளைக் கண்டறிந்து சிறப்பு நிதி வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், ரூ.2,000 வழங்கும் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு நகல் தாக்கல் செய்யப்பட்டது.
அதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT