Published : 29 Mar 2019 07:01 AM
Last Updated : 29 Mar 2019 07:01 AM
ஆறுமுகசாமி ஆணையத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சிப்பதை தடுக்கக் கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை அதிமுக செய்தித் தொடர்பாளர் களில் ஒருவரான பாபு முருகவேல் நேற்று சந்தித்து ஒரு மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. அந்த ஆணையம் பல சாட்சிகளை விசாரித்துள்ளதுடன், ஆவணங் களையும் ஆய்வு செய்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கும் நிலையில், ஆறுமுகசாமி ஆணை யம் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறை கூறி வரு கிறார். அவருடன் மறைமுகமாக கூட்டு வைத்துள்ளவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டி இப்படி கூறுகிறார். தேர்தலில் வெற்றி பெற்று வந்தால், அதிகாரத்தை பயன்படுத்தி தனியான விசாரணைக் குழுவை அமைத்து ஜெயலலிதாவின் மரணத்தில் உண்மையை வெளிக் கொண்டுவருவோம் என்று பிரச்சாரத்தில் கூறி வருகிறார்.
விசாரணை ஆணையம் நீதிமன்றத்துக்கு இணையானது. ஆணையம் தொடர்பான தவறான கருத்துகளை பரப்பக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆனால், இதுபோன்ற கருத்துகளை ஸ்டாலின் பரப்பி வருகிறார். தேர்தல் ஆணையம் இதில் தலையிட்டு, தடுத்து நிறுத்த வேண்டும் என்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கட்சி சார்ந்தவர்கள், பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறி, பொதுமக்களை வாகனங்களில் அழைத்து வந்துள்ளனர். இதற்கான செலவுகளை வேட்பாளர்கள் செலவின கணக்கில் சேர்க்க வேண்டும் என்றும் மனு கொடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT