Published : 27 Feb 2019 11:10 AM
Last Updated : 27 Feb 2019 11:10 AM
திமுக தலைவர் ஸ்டாலினால் தான் எல்லோருக்கும் அச்சுறுத்தல் என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபின், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விவரம்:
அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தை மெதுவாக நடைபெறுகிறதா?
கூட்டணி பேச்சுவார்த்தை ஒரே நாளில் முடிவது இல்லை, தொடர்ச்சியாக நடைபெறுவது. அதிமுக தேர்தல் பங்கீட்டுக் குழு அமைத்துள்ளது, எங்கள் தலைமையிலான கூட்டணியில் முக்கிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. எல்லா வேலைகளும் ஜெட் வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், எந்த நிலையிலும் தொய்வு இல்லை. இதே வேகத்தில் மக்களை சந்திப்போம். 'நாளை நமதே, நாற்பதும் நமதே' என்ற முழக்கத்தின் அடிப்படையில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றியை பெறும்.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி எவ்வாறு உள்ளது?
முதல்வர், துணை முதல்வர் சில வழிமுறைகளை தந்துள்ளனர். ஏற்கெனவே, எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்த பாதையும் தெளிவாக உள்ளது. தமிழ்நாட்டின் நலன், தமிழர் நலன், மாநில உரிமைகள் இவை மூன்றை சார்ந்து தான் தேர்தல் அறிக்கை இருக்கும்.
ஸ்டாலின் தனி விமானத்தில் பயணம் செய்வதை எப்படி பார்க்கிறீர்கள்?
தனி விமானத்தில் ஒருவர் பயணம் செய்யக்கூடாது என்று நான் கருத்து சொல்ல முடியாது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு உலக அளவில் அச்சுறுத்தல் இருந்தது. அதனால், பாதுகாப்புக் கருதி தனி விமானத்தில் பயணம் செய்தார். ஆனால், ஸ்டாலினுக்கு யார் அச்சுறுத்தல்? இவரால் தான் எல்லோருக்கும் அச்சுறுத்தல்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT