Published : 28 Jan 2019 11:17 AM
Last Updated : 28 Jan 2019 11:17 AM

மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் விடுவதை தடுக்காமல் கொசுவை ஒழிக்க புகை பரப்பும் இயந்திரங்களை வாங்கி குவிக்கும் மாநகராட்சி: பொதுமக்கள் குற்றச்சாட்டு

கொசுக்களை ஒழிக்க மழைநீர் வடிகால் மற்றும் நீர்வழித் தடங்களில் கழிவுநீர் விடப்படுவதை தடுக்காமல், புகை பரப்பும் இயந்திரங்களை வாங்கிக் குவிப்பதாக சென்னை மாநகராட்சி மீது பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் சுமார் 1,800 கிமீ நீளத்துக்கு மழைநீர் வடிகால் கட்டமைப்பு உள்ளது. இவை, மழைக்காலங்களில் நீர்த் தேக்கம் ஏற்படாமல் மழை நீர் வழிந்தோடுவதற்காக கட்டப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு சென்னையில் பருவமழை குறைவாக பெய்த நிலையில், அவை வறண்டிருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான மழை நீர் வடிகால்களில் இன்றும் கழிவுநீர் நிரம்பி சாலையில் ஓடுகின்றன. முன்பு, கழிவுநீர் கட்டமைப்பு இல்லாத பகுதிகளில் மழைநீர் வடிகால்களிலும், நீர் வழித் தடங்களிலும் கழிவுநீர் விடப்பட்டன. ஆனால் தற்போது கழிவுநீர் கட்டமைப்பு சிறப்பாக உள்ள எம்ஆர்சி நகர் பகுதிகளிலும் மழைநீர் வடிகாலில் கழிவுநீர் விடப்பட்டு வருகிறது. இதில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதுடன், தூர் வாருவதிலும் சிரமம் ஏற்படுகிறது.

மேலும், சென்னை மாநகரில் உள்ள அடையாறு, கூவம், பக்கிங் ஹாம் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், ஓட்டேரி நல்லா கால் வாய் என 30-க்கும் மேற்பட்ட நீர்வழித் தடங்களும், பருவமழை குறைந்ததால் வறண்டிருக்க வேண்டும். ஆனால் அதிலும் கழிவுநீர் ஓடுகிறது.

கொசுக்களை ஒழிக்க அதன் உற்பத்தி ஆதாரங்களை அழிக்க வேண்டும். புழுவாக இருக்கும்போதே அழிப்பதுதான் சிறந்த பணியாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

புகை பரப்புவதால் கொசுக்கள் அழிவதில்லை. அதற்கு மருந்தின் தன்மை காரணமா, கொசுக்களுக்கு மருந்தை எதிர்க்கும் திறன் அதிகரித் துள்ளதா என்று எந்த ஆய்வும் அரசாலும், மாநகராட்சியாலும் மேற் கொள்ளப்படவில்லை. அந்த புகை மருந்து நல்ல உடல்நிலை கொண்ட மக்கள் எதிர்கொண்டால் பிரச் சினை இருக்காது என்ற அளவி லேயே பயன் படுத்தப்படுகிறது. தெருவெங்கும் புகை பரப்பும் போது, ஒரு வீட்டில் ஆஸ்துமா நோயாளியோ, சுவாச பிரச்சினை இருப்பவரோ எத்தகைய சிரமத் துக்கு உள்ளாவர் என்பது குறித்து மாநகராட்சி கவலைப்படுவ தில்லை. புகை பரப்புவதற்கு முன்பாக பொது மக்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடுவதில்லை.

மாநகராட்சி நிர்வாகத்திடம் ஏற்கெனவே, 312 கையினால் புகை பரப்பும் இயந்திரங்கள், 23 சிறிய ரக புகைப்பரப்பும் இயந்திரங்கள், 39 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் உள்ளன. இந்நிலையில் ரூ.38 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மேலும் 7 நவீன பெரிய புகை பரப்பும் இயந்திரங்களை வாங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

புகை பரப்புவதால் பல்வேறு உடல்நலக் கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிந்திருந்தும், கொசு உற்பத்தியை ஆரம்ப நிலையிலேயே தடுக்காமல், தொடர்ந்து புகை பரப்பி முதிர் கொசுக்களை அழிக்கவே மாநக ராட்சி ஆர்வம் காட்டி வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “கொசுவால் பரவும் டெங்கு போன்ற உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்கள் தீவிரமடையும்போது, அதை தடுக்கவும், முதிர் கொசுக் களைக் கொன்று உடனடி தீர்வு காணவும் புகை பரப்பும் இயந்திரங் கள் பயனுள்ளதாக இருக்கும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x