Last Updated : 31 Jan, 2019 11:22 AM

 

Published : 31 Jan 2019 11:22 AM
Last Updated : 31 Jan 2019 11:22 AM

திருக்கனூர் அருகே செட்டிப்பட்டு கிராமத்தில் செடி அவரையில் அதிக லாபம் ஈட்டும் விவசாயி

செடி அவரைக்காய் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டி வருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த விவசாயி ரவி.

புதுச்சேரி அடுத்த திருக்கனூர் அருகே உள்ள செட்டிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரவி, விவசாயியான இவர் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் செடி அவரைக்காய் சாகுபடி செய்து குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டி வருகிறார். இவரது முயற்சியை கண்டு மற்ற விவசாயிகளும் செடி அவரை சாகுபடியில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.

இது பற்றி விவசாயி ரவி நம்மிடம் கூறியது:

புதுச்சேரி அரசு வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் (ஆத்மா) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அது போல் நான் ஓசூர் சென்றேன். நம் பகுதி விவசாயிகள் நெல், கரும்பு போன்றவை 3 போகங்கள் பயிரிடுவது போல, அவர்கள் செடி அவரை, பீட்ரூட், நூக்கோல் போன்ற பயிர்களை சாகுபடி செய்கின்றனர். அதனை பார்க்கும் போது அவற்றை பயிரிட வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அங்குள்ள விவசாயிகளிடம் பயிரிடும் முறைகள் குறித்து கேட்டறிந்தேன்.

திருக்கனூர் உழவர் உதவியகத்தை அணுகினேன். அவர்களும் ஆத்மா திட்டத்தின் கீழ் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள செடி அவரை விதை மற்றும் இடுபொருள் கொடுத்து ஆலோசனை வழங்கினர்.

அதன்பிறகு புதுச்சேரியில் முதன்முதலாக கடந்த அக்டோபர் மாதம் செயல் விளக்கம் முறையில் என்னுடைய ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்தேன். நல்ல லாபம் கிடைத்தது.

சந்தையில் நல்ல வரவேற்பு

கொடி அவரை சாகுபடிக்கு பந்தல் தேவை. அதற்கு ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் வரை செலவிட வேண்டும். ஆனால் செடி அவரைக்கு பந்தல் தேவையில்லை. தவிர விதைத்து இரண்டு மாதங்களில் காய் பறிக்கலாம்.

நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 30 கிலோவும், அதிக பட்சம் 90 கிலோ வரையும் அறுவடை செய்து வருகிறேன். இதன் மூலம் தினமும் வருவாயும், நல்ல லாபமும் கிடைக்கிறது. அவரைக்காய்க்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளதால், சராசரியாக, கிலோ 25 ரூபாய் வரை போகிறது. நானே அறுவடை செய்து சந்தைக்கு அனுப்புகிறேன். சமயங்களில் கடை வீதியில் நானே விற்பனை செய்து விடுகிறேன்.

ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் வரை செலவிட்டால் போதும்; ரூ.25 ஆயிரம் எடுக்கலாம். அடுத்த ஆண்டு செடி அவரைக் காய் பயிரிடுவதோடு பீட்ரூட், நூக்கோல் போன்றவைகளையும் பயிரிட உள்ளேன்.

நான் அவரைக்காய் சாகுபடி செய்ததை அறிந்து உள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கொடுக்கூர், திருவக்கரை, வீடூர் போன்ற இடங்களில் இருந்து வந்து பல விவசாயிகள் பார்வையிட்டு விளக்கம் கேட்டனர். நானும் அவர்களுக்கு பயிரிடும் முறை குறித்து தெரிவித்தேன். அவர்களும் செடி அவரைக்காய் சாகுபடி செய்ய ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x