Published : 01 Jan 2019 06:37 PM
Last Updated : 01 Jan 2019 06:37 PM

பிளாஸ்டிக் பொருளை சேமித்து வைத்தால் பறிமுதல்: சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும்  சுமார் 1880 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பொதுமக்களிடமிருந்து நேற்று ஒருநாள் பெறப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை:

தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முதல்வர் சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் இன்றுமுதல் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்களது வீடு, அலுவலகம், தொழிற்கூடங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் உணவு விடுதிகளில் உள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தங்களது பகுதிக்குட்பட்ட வார்டு அலுவலகங்களில் டிச. 31 அன்றுக்குள் ஒப்படைக்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சியால் கேட்டுக் கொள்ளப்பட்டது. 

அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் சுமார் 1.88 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் நேற்று மாலை 6.00 மணி வரை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை சார்பாக பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்கள் சென்னை மாநகர் முழுவதும் நடத்தப்பட்டு  வருகின்றன. கடந்த டிச.29 அன்று ஆணையரின் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை ஜன.1 முதல் சேமித்து வைத்தாலோ, விற்பனை செய்தாலோ, உபயோகப்படுத்தினாலோ பறிமுதல் செய்ய அறிவுறுத்தினார். 

மேலும், வணிக வளாகங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்துமாறும் உத்திரவிட்டார்.

அதன் பேரில், கடந்த டிச.30  முதல் பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து கோட்டங்களிலும் மண்டல அலுவலரின் மேற்பார்வையில் தொடர்ந்து தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

இதில் சிறப்பு நிகழ்வாக பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை சார்பாக அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட ஸ்கைவாக் வணிக வளாகத்தில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு நேற்று பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய பாக்கு மர தட்டுகள், துருப்பிடிக்காத எஃகு தட்டுகள், துணிப்பைகள், சணல் பைகள், கண்ணாடி குவளைகள், காகித உறிஞ்சு குழல்கள், துருப்பிடிக்காத எஃகு பாட்டில்கள் போன்றவைகளை கண்காட்சியில் வைக்கப்பட்டு  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் கைப்பைகள் உட்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதினால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

பின்னர் வணிகவளாகத்தில் பிளாஸ்டிக் பைகளை கொண்டு வந்த பொதுமக்களுக்கு அதற்கு மாற்றாக 200 எண்ணிக்கையில் துணிப்பைகள் வழங்கப்பட்டன.

இவ்வாறு மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x