Last Updated : 26 Dec, 2018 10:20 AM

 

Published : 26 Dec 2018 10:20 AM
Last Updated : 26 Dec 2018 10:20 AM

சபரிமலையில்  புண்ணிய  சேவை: ஐயப்ப சேவா சங்கத்தின் ஆத்மார்த்தமான பணி

‘பிரார்த்தனை செய்... கடவுளின் அருகில் செல்லலாம். சேவை செய்... கடவுளே உன் அருகில் வருவார்...’ என்பதற்கேற்ப, ஐயப்ப பக்தர்களுக்காக பல்வேறு சேவைகளை ஆற்றி வருகிறது அகில பாரத ஐயப்ப சேவா சங்கம்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந் திரா, தெலங்கானா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்கள், பல நாடுகளில் சுமார் 6 ஆயிரம் கிளைகளுடன் இந்த சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் 1.80 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

முக்கிய கோயில்களில் விழாக் களின்போது கூட்டத்தை ஒழுங்கு படுத்துவது, கோயில் உண்டியல் காணிக்கைகளைக் கணக்கிடுவது, அன்னதானம் செய்வது, இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது என பல்வேறு பணிகளை இச்சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

குறிப்பாக, ஐயப்பனின் பூங்காவன மான சபரிமலையில் மண்டல பூஜை, மகர விளக்கு காலங்களில் 60 நாட்களுக்கு இவர்கள் மேற்கொள்ளும் பணி மிகவும் உன்னதமானது. இச் சங்கம் சார்பில் இந்த ஆண்டு செங்கணூர், எருமேலி, அழுதா, கல்லிடும்குன்று, கரிமலை, பம்பை, நிலக்கல், அப்பாச்சிமேடு, சரங்குத்தி, சன்னிதானம் ஆகிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த முகாம்களில் அன்னதானம், மூலிகை குடிநீர் வழங்குதல், மருத்துவ முகாம், ஆக்ஸிஜன் பார்லர், தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பக்தர்களுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்படும்போது அவர்களை மீட்டு மருத்துவ முகாம்களுக்கு கொண்டு செல்ல பம்பா முதல் சன்னிதானம் வரை ஸ்ட்ரெச்சர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் யாராவது எதிர்பாராதவிதமாக உயிரிழக்க நேரிட்டால், உடலை பம்பையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்று, இறப்புச் சான்றிதழ் பெற்றுத் தந்து, அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

ஐயப்ப சேவா சங்கத்தின் தேசியத் தலைவராக தென்னலா பாலகிருஷ்ண பிள்ளை, பொதுச் செயலாளர் வேலாயுதம் நாயர், மாநிலத் தலைவர் விஸ்வநாதன், செயலாளர் ஐயப்பன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். அவர்களது மேற்பார்வையில் இப்பணிகளை, சங்கத்தின் மத்திய துணைத் தலைவரும், சபரிமலை முகாம் அதிகாரியுமான எம்.ஸ்ரீதர் மேற்கொண்டு வருகிறார். அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் பணிகள் குறித்து ‘இந்து தமிழ்‘ நாளிதழிடம் அவர் கூறியதாவது:

சபரிமலை, பம்பை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் அன்னதான முகாமில் காலை, மதியம், இரவு என 3 வேளையும் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழி மிகவும் செங்குத்தானது. அதனால், பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு ஏறுவார்கள். அந்த வழியில் மூச்சுத்திணறல், இதய படபடப்புடன் வரும் பக்தர்களுக்கு முகாம்களில் ஆக்ஸிஜன் செலுத்தப்படுவதுடன், முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

தேவைப்படும் பட்சத்தில் ஸ்ட்ரெச் சர் மூலம் அவர்களை பம்பை அல்லது சன்னிதானம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன்படி, இதுவரை 1,426 பேருக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டுள்ளது. 28,565 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. 404 பேர் ஸ்ட்ரெச்சர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு உயி ரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர், கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த தலா ஒருவர் என 13 பேருக்கு இறப்புச் சான்றிதழ் பெற்று, உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்ட்ரெச்சர் சேவையில் ஈடுபட் டுள்ள தஞ்சாவூரைச் சேர்ந்த கேப்டன் தாமோதரன் கூறும்போது, ‘‘நான் இந்த சேவையில் 40 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன். இதை எனக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறேன். என் வாழ்நாளில் முடிந்த அளவுக்கு இந்த சேவையில் ஈடுபடுவேன்’’ என்றார் நெகழ்ச்சியுடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x