Published : 22 Nov 2018 12:38 PM
Last Updated : 22 Nov 2018 12:38 PM

கஜா புயலால் 63 பேர் உயிரிழப்பு; ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டது ஏன்?- முதல்வர் பழனிசாமி விளக்கம்

'கஜா' புயலால் 63 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 'கஜா' புயல் பாதிப்புகளுக்காக நிவாரணம் வழங்கவும், மத்தியக் குழுவை தமிழகத்திற்கு அனுப்பி பார்வையிட வேண்டும் எனவும் வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று (வியாழக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரில் சந்தித்துப் பேசினார். அவருடன், அமைச்சர் ஜெயக்குமார், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

பிரதமரைச் சந்தித்த பின் , முதல்வர் பழனிசாமி செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

பிரதமரிடம் என்னென்ன கோரிக்கைகளை வலியுறுத்தினீர்கள்?

'கஜா' புயல் நிவாரண நிதியாக ரூ.15,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். சீரமைப்புப் பணிகளுக்கு முதல்கட்டமாக 1,500 கோடி ரூபாய் வழங்கவும் வலியுறுத்தினேன். சேத விவரத்தைப் பார்வையிட மத்தியக் குழுவை அனுப்புமாறு கோரினேன். உடனடியாக மத்தியக் குழுவை அனுப்பி வைப்பதாக பிரதமர் கூறினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு 82,000 பேரை முகாம்களில் தங்க வைத்ததால் பாதிப்புகள் குறைக்கப்பட்டன. இரண்டு முறை எனது தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழக அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மத்திய அரசின் பங்கு என்ன?

நான் எங்கள் பணிகளைக் குறிப்பிடுகிறேன். மத்திய அரசின் பணிகளை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

தமிழகத்தில் தொடரும் பேரிடர்களைச் சமாளிக்க  ஏதேனும் கோரிக்கைகள் வைத்தீர்களா?

அந்தந்த மாவட்டங்களில் அதிகாரிகளை அனுப்பி வைத்து சேத விவரங்களைச் கணக்கிட்டு அதனை பிரதமரிடம் அளித்துள்ளோம். பிரதமர் தமிழகம் வருவாரா?அதுகுறித்து பிரதமர் உறுதி அளிக்கவில்லை.

'கஜா' புயல் பாதிப்புகள் என்னென்ன?

பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 12. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.

சேதமடைந்த குடிசை வீடுகள் 2 லட்சத்து 78,824. ஓட்டு வீடுகள் 62,996. மொத்தம் 3 லட்சத்து 41,820. 

உயிரிழந்த ஆடு, மாடுகள் 12,298. பறவைகள் 92,507. மொத்தம் 1 லட்சத்து 4,805.

சேதமடைந்த மரங்கள் 11 லட்சத்து 32,686. அகற்றப்பட்ட மரங்கள் 7 லட்சத்து 27,390.

தற்போது உள்ள மீட்பு முகாம்கள் 556. அவற்றில் 3 லட்சத்து 78,019 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சேதமடைந்த மின்கம்பங்கள் 1 லட்சத்து 3,508. அவற்றில் 40% சீரமைக்கப்பட்டுள்ளன. 886 மின்மாற்றிகள் சேதம் அடைந்துள்ளன. அவற்றில் 40% சீரமைக்கப்பட்டுள்ளன. பழுதடைந்த துணை மின் நிலையங்கள் 181. சீராமைக்கப்பட்ட மின்நிலையங்கள் 146. துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகள் 53 லட்சத்து 23,096. சீரமைக்கப்பட்ட மின் இணைப்புகள் 40 லட்சத்து 4,452. மின் சீரமைப்பு பணிகளில் 22,163 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்ட நகராட்சிப் பகுதிகள் 184. அவை சீரமைக்கப்பட்டுவிட்டன. பேரூராட்சிப் பகுதிகள் 270. அவற்றில் 252 சீரமைக்கப்பட்டுள்ளன. ஊராட்சிப் பகுதிகள் 8,522. அவற்றில் சீரமைக்கப்பட்டவை 7,952 .

590 நிரந்தர மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2,616 நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றால் பயனடைந்தவர்கள் 1 லட்சத்து 96,063.

பகுதி சேதமடைந்த படகுகள் 2,625. முழுவதுமாக சேதமடைந்த படகுகள் 1,419.

சேதமடைந்த வேளாண் மற்றும் தோட்டப் பயிர்கள் 88,102 ஹெக்டேர். 30,000 ஹெக்டேர் தென்னை மரங்கள் பாதிப்படைந்துள்ளன. 32,706 ஹெக்டேர் நெற்பயிர் பாதிப்பு அடைந்துள்ளன.

திமுக ஆட்சியில் 2008-ல் புயல் வந்தபோது உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் தான் கொடுத்தார்கள். கால்நடை இழப்புக்கு 10 ஆயிரம் ரூபாய் தான் கொடுத்தார்கள். உயிரிழந்த ஆடுகளுக்கு 1,000 ரூபாய்,  சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 2,000 ரூபாயும் வழங்கப்பட்டது.

2002-ல் திமுக ஆட்சியில் 'ஜல்' புயல் வந்தபோது உயிரிழந்த குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்தார்கள். கால்நடைக்கு 10,000 ரூபாயும்,  முழுவதும் பாதிப்படைந்த குடிசைகளுக்கு 5,000 ரூபாயும், பகுதி சேதமடைந்த குடிசைகளுக்கு 2,000 ரூபாயும் வழங்கப்பட்டது.

இப்போதைய அதிமுக ஆட்சியில் இழப்பீடு தொகை பெருமளவில் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே குறைத்து வழங்கியுள்ளதாக தவறான தகவல் தெரிவிக்கிற, மனிதாபிமான அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டியது அரசின் கடமை. முடிந்த அளவுக்கு செய்யப்பட்டிருக்கிறது. குறை சொல்வதற்காக ஒப்பிடவில்லை.

ஏன் நீங்கள் சாலை மார்க்கமாக சென்று பாதிப்படைந்த பகுதிகளை பார்க்கவில்லை?

சாலை மார்க்கமாக சென்ற ஸ்டாலின் எத்தனை இடங்களைப் பார்த்தார். 4 மாவட்டங்கள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் மூலம் சென்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தெளிவாக உள்ளன. ஹெலிகாப்டரில் தாழ்வாகப் பறந்து எல்லாவற்றையும் பார்வையிட்டுள்ளோம்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x