Published : 19 Nov 2018 10:15 PM
Last Updated : 19 Nov 2018 10:15 PM

கஜா புயல் பாதிப்பு: நிவாரணம் என்ன? முதல்வர் அறிவிப்பு

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான நிவாரணம் குறித்து முதலவர் எடப்பாடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கை:

“கஜா” புயல் மற்றும் கனமழையின் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 514 பாதுகாப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில் 2,51,674 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுகின்றன.

இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவையும் வழங்கப்பட்டு வருகின்றன.           இது தவிர, முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு கூடுதலாக ஒரு வேட்டியும், சேலையும் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.  மேலும், கூடுதலாக 4 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்கள், வீடுகளை இழந்தவர்கள், மீன்பிடி கலன்கள்/வல்லம்/கட்டுமரம் சேதமடைந்ததனால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு  உடனடி வாழ்வாதார நிவாரணமாக குடும்பம் ஒன்றுக்கு தலா 5,000 ரூபாயும், துணிமணிகள், பாத்திர பண்டங்கள் ஆகியவை வாங்க குடும்பம் ஒன்றுக்கு 3,800/-ரூபாயும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

முகாம்களில் தங்கியுள்ள பெரியோர்கள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆவின் நிறுவனம் மூலம் பால் வழங்கவும் நான் உத்தரவிடப்பட்டுள்ளது. பொது மக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் 420 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 1249 நடமாடும் மருத்துவ முகாம்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது வரை 97,825 நபர்கள் இம்மருத்துவ முகாம்கள் மூலம் பயன் பெற்றுள்ளனர்.

தேவையான மருந்து மற்றும் கிருமி நாசினிகள் கையிருப்பில் வைக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பன்முக நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

 ‘கஜா’ புயல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்த 46 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டதோடு, அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்க ஏற்கனவே நான் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாய் வழங்கவும்

உயிரிழந்த 231 பசு மற்றும் எருமை மாடுகளுக்கு  தலா 30 ஆயிரம் ரூபாயும்,  20 காளை மாடுகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், 19 கன்றுகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாயும், 1181 ஆடுகளுக்கு 3 ஆயிரம் ரூபாயும், 14,986 கோழி மற்றும் பறவைகளுக்கு தலா 100 ரூபாயும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

“கஜா” புயலினால் பாதிக்கப்பட்ட கிராம பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு 2018 டிசம்பர் மாதத்திற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை, நவம்பர் மாதமே அதாவது தற்போதே சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்க உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு நான் உத்தரவிடப்பட்டுள்ளது.

“கஜா” புயல் மற்றும் கனமழையின் தாக்கத்தினால் முழுவதும் சேதமடைந்த குடிசை வீடு ஒன்றுக்கு 10,000 ரூபாயும், பகுதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 4,100 ரூபாயும், வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.  முழுவதும் சேதமடைந்த குடிசைகளுக்கும், வீடுகளுக்கும் பதிலாக தகுதி வாய்ந்த நபர்களுக்கு புதியதாக வீடு கட்ட உரிய நிதி உதவி வழங்கப்படும்.

மேலும், ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு 25 கோடி ரூபாய், நெடுஞ்சாலைத் துறைக்கு 25 கோடி ரூபாய்; பொதுப்பணித்துறைக்கு 10 கோடி ரூபாய், சுகாதாரத்துறைக்கு 2 கோடி ரூபாய், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு 5 கோடி ரூபாய், நகராட்சி நிர்வாக துறைக்கு 5 கோடி ரூபாய், பேரூராட்சிகளின் இயக்குநரகத்திற்கு 5 கோடி ரூபாய், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகங்களுக்கு தலா 5 கோடி ரூபாய், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு 2.5 கோடி ரூபாய், சிவகங்கை, இராமநாதபுரம், கரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தேனி மாவட்ட நிர்வாகங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கவும் நான் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் இதயத்துடிப்பாக விளங்கிக்கொண்டிருக்கும் வேளாண் பெருமக்கள் “கஜா” புயலின் கோரத்தாண்டவத்தினால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.  இதுவரை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 12 மாவட்டங்களில் 88,102 ஹெக்டேர் வேளாண்மை மற்றும் தோட்டகலைப் பயிர்கள் பாதிப்படைந்தது தெரியவந்துள்ளது. 

“கஜா”  புயல் தாக்குதல் காரணமாக மேற்கூறிய 12 மாவட்டங்களில் 32,706 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்கள், 30,100 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தென்னை மரங்கள், 7,636 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், 4,747 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை, 4,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த காபி பயிர், பயறு, பருத்தி, முந்திரி மற்றும் பலா மரங்கள் போன்றவையும் 3,253 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த முந்திரி பயிர்களும், 500 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்களும், 945 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மா மரங்களும், 2,707 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த காய்கறி பயிர்களும்  சேதம் அடைந்துள்ளன. 

தென்னை பயிருக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஒரு மரத்திற்கு 600 ரூபாய் வழங்கவும், அவற்றை வெட்டி அகற்றிட ஒரு மரத்திற்கு 500 ரூபாய் வழங்கவும், ஆக மொத்தம் ஒரு மரத்திற்கு 1100 ரூபாய் வழங்க நான் உத்தரவிடப்பட்டுள்ளது.

சுமார் 175 மரங்கள் நடப்பட்டுள்ள ஹெக்டேர் ஒன்றுக்கு 1,92,500 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.  இதுதவிர, மறுசாகுபடி செய்ய ஹெக்டேருக்கு 72,100 ரூபாய் வழங்கப்படும்.  இதன்மூலம் நிவாரணம் மற்றும் மறுசாகுபடிக்கு தென்னை விவசாயிகள் ஹெக்டேருக்கு 2,64,600 ரூபாய் பெறுவர்.  மேலும், சொட்டு நீர் பாசனத்திற்கு சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும்.

நெல் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு 13,500 ரூபாய் வழங்கப்படும்.  கரும்பு, வாழை, காய்கறிகள் மற்றும் மலர்கள் போன்ற பாசன பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு 13,500 ரூபாய் வழங்கப்படும்.  இப்பயிர்களை மறுசாகுபடி செய்ய ஆகும் செலவில் 40 முதல் 50 சதவீத மானியம் வழங்கப்படும். 

முந்திரி பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு 18,000 ரூபாயும், அவற்றை வெட்டி அகற்றிட மரத்திற்கு 500 ரூபாயும், மறுசாகுபடி செய்ய 40 முதல் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.  சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்காக சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரையும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமாக ரூபாய் 75,000 வரையும் மறுசாகுபடி செய்வதற்கு வழங்கப்படும்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்களுக்கு பால் எளிதில் கிடைத்திட ஆவின் நிறுவனம் மற்றும் கூட்டுறவு நியாய விலைக்கடைகள் மூலமாக விநியோகம் செய்திடவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

 

குடிநீர் விநியோகத்தைப் பொறுத்தவரையில், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட பாதிக்கப்பட்ட 184 நகர்ப்புற பகுதிகளில் 98 நகர்புற பகுதிகளிலும், பேரூராட்சிக்கு உட்பட்ட 270 வார்டுகளில் 252 வார்டுகளிலும், 7,248 ஊரக பகுதிகளில் 1,266 ஊரக பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது. 

 

மாவட்டத்தில் மின்சாரம் இல்லாத இடங்களில் ஜெனரேட்டர்கள் உதவியுடனும் மற்றும் லாரிகள் மூலமாகவும் தங்கு தடையின்றி மக்களுக்கு குடிநீர் வழங்கிடவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேற்சொன்ன மாவட்டங்களில் “கஜா” புயலின் காரணமாக 86,702 மின் கம்பங்கள், 841 மின் மாற்றிகள், 201 துணை மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளன.

 

 மின்சார விநியோகத்தைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கூடுதலாக மின்கம்பங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அனுப்பிட நான் உத்தரவிட்டுள்ளேன்.  மேலும், சுமார் 77,000 மின்கம்பங்கள் அண்டை மாநிலங்களிலிருந்து வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

மின்சார சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்தை சேர்ந்த 21,461 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  இதுதவிர, பிற மாவட்டங்களிலிருந்தும், உள்ளூரிலிருந்தும் கூடுதலாக பணியமர்த்த நான் உத்தரவிட்டுள்ளேன்.   மின்சார கட்டமைப்புக்கு ஏற்பட்ட இது போன்ற பேரழிவை சீர்செய்ய அதிக காலம் ஆகும் என்ற போதிலும் எனது தலைமையிலான அரசின் இடைவிடாத முயற்சியிலும், “கஜா” புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து இடங்களிலும் விரைவில் மின் வசதி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

இத்தகைய பணிகளை மின்வாரியம் விரைந்து முடித்திட முதற்கட்டமாக 200 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

 “கஜா”  புயல் காரணமாக, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், கடலுர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் முதற்கட்ட கணக்கீட்டின்படி கட்டுமரங்கள்,  குசுஞ படகுகள், விசைப் படகுகள் போன்ற சுமார் 4,844  மீன்பிடி படகுகள், 5,550 மீன் வலைகள் மற்றும் 5,727 படகுகளின் எஞ்சின்கள் சேதமடைந்துள்ளன. 

 

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணமாக, முழுவதும் சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு 42,000 ரூபாயும், பகுதி சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு 20,000 ரூபாய் வரையும், முழுவதும் சேதமடைந்த கு.சு.ஞ. படகுகள் மற்றும் வலைகளுக்கு 85,000 ரூபாயும், பகுதி சேதமடைந்த கு.சு.ஞ. படகுகள் மற்றும் வலைகளுக்கு 30,000 ரூபாய் வரையும், முழுவதும் சேதமடைந்த விசைப் படகுகளுக்கு 5  லட்சம் ரூபாயும், பகுதி சேதமடைந்த விசைப் படகுகளுக்கு 3 லட்சம் ரூபாய் வரையும், வலைகள் மட்டுமே சேதம் அடைந்திருந்தால் 10,000 ரூபாயும், எஞ்சின் பழுது நீக்கம் செய்ய 5,000 ரூபாயும் வழங்கப்படும். 

 

 “கஜா”  புயல் காரணமாக, மேற்கூறிய  மாவட்டங்களில் பெரும்பாலான சாலைகளில் மரங்கள் விழுந்ததை சீர்செய்ய 600 து.ஊ.க்ஷ. இயந்திரங்கள்,  141 மின்சார மரவெட்டிகள், 60 லாரிகள் மற்றும் 65 டிராக்டர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி சுமார் 2,000 பணியாளர்கள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  இதன்மூலம் நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகள் என முக்கிய சாலைகள் அனைத்திலும் மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. 

 

ஜெயலலிதா வழியில் செயல்படும் அம்மாவின் அரசு, மக்களுக்கான மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.  இப்பணிகளுக்கு நிதி உதவி அவசியம் என்பதை கருத்தில் கொண்டு 1,000 கோடி ரூபாய் உடனடியாக விடுவித்திட உத்தரவிட்டுள்ளேன்.

 

“கஜா”  புயல் கடுமையான மற்றும் பெரிய அளவிலான சேதாரங்களை உண்டாக்கியுள்ளது.  லட்சக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள், சாலைகள், தென்னை மரங்கள், வேளாண் பயிர்கள், குடிநீர் திட்டங்கள், வீடுகள், பொது கட்டடங்கள் ஆகியவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. 

 

இப்பேரழிவினை கருத்தில் கொண்டு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு உடனடியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தேவையான நிதியினை அளிக்க மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தும். 

 

 “கஜா” புயலால் பாதிக்கப்பட்ட மேற்படி மாவட்டங்களுக்கு 20.11.2018 அன்று நான் நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்க உள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  அமைச்சர் பெருமக்கள் மேற்கூறிய மாவட்டங்களில் தங்கியிருந்து நிவாரண உதவிகளை  வழங்குவார்கள்.

ஜெயலலிதா வழியில் வந்த அரசு, வேளான் பெருமக்கள், மீனவர்கள், ஏழை எளியோர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்படும் அரசு.  மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் குடிமக்கள், நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள், தமிழ்நாடு அரசு எடுத்து வரும் மாபெரும் நிவாரணம் மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு  நன்கொடைகள் மூலம் உதவிட வேண்டுகிறேன்.

 

மேலும், தற்போது தமிழ்நாடு அரசால் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு  மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன்.

 

இவ்வாறு எடப்பாடி தெரிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x