Last Updated : 27 Nov, 2018 02:50 PM

 

Published : 27 Nov 2018 02:50 PM
Last Updated : 27 Nov 2018 02:50 PM

கிரண்பேடிக்கு எதிரான தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டுப் பெண் 

புதுச்சேரியிலுள்ள சுதேசி பஞ்சாலை மற்றும் பாரதி மில் பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்க கோப்புகளை நிராகரித்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து ஊழியர்கள் நடத்திய மனித சங்கிலிப் போராட்டத்தில் சுற்றுலா வந்த ஜெர்மன் பெண்ணும் விவரம் அறிந்து ஆதரவு தெரிவித்து பங்கேற்றார்.

புதுச்சேரியில் பாரம்பரியமான சுதேசி மில், பாரதி மில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மனித சங்கிலிப் போராட்டம் நகரின் முக்கியமான நேரு வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

போராட்டத்தில் ஐஎன்டியூசி, என்ஆர்டியூசி, ஏஐடியூசி, எல்பிஎப், சிஐடியூ உள்பட 12 சங்கத்தினர் பங்கேற்றனர்.

போராட்டம் தொடர்பாக அனைத்து தொழிற்சங்கப் போராட்டக் குழு தலைவர் அபிஷேகம் கூறுகையில், "கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போதே சுதேசி மற்றும் பாரதி பஞ்சாலை தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால், சுதேசி மற்றும் பாரதி பஞ்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இதை விசாரித்தால், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கோப்புகளில் கையெழுத்து இடாமல் நிறுத்தி வைத்துள்ளார்.எனவே கடந்த  4 மாத நிலுவை ஊதியம் மற்றும் தீபாவளி போனஸை வழங்க வேண்டும்", என்றார்.

ஜெர்மன் பெண்ணின் ஆதரவு

முக்கிய வீதியான நேரு வீதியில் நடைபெற்ற போராட்டத்தை ஜெர்மனிலிருந்து சுற்றுலா வந்த கிறிஸ்டினா பார்த்து விவரங்களைக் கேட்டறிந்தார். ஊதியம் தராதது மிகக் கொடுமையானது என்று தெரிவித்து அவரும் சிறிது நேரம் மனித சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்று தனது ஆதரவைத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x