Published : 04 Oct 2018 12:19 PM
Last Updated : 04 Oct 2018 12:19 PM

தமிழகத்திற்கு வரும் 7 -ம் தேதி மிக அதிக கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி மிக அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு தினங்களாக மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே கனமழை காரணமாக திருவாரூர், சேலம், நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் 8 ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வரும் 7 -ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்திற்கு மிக அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அனுப்பியுள்ளது.

இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளதன் படி 7 -ம் தேதி தமிழகத்தில் 25 செமீ-க்கும் அதிகமான அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது. மிக மோசமான வானிலை நிலவும் என்பதை குறிப்பதே ரெட் அலர்ட். குறிப்பாக, கடலோர மாவட்டங்கள், தமிழக உள்மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

அந்த நாளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை தயார் நிலையில் வைக்குமாறு அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டவர்களும் தயார் நிலையில் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்கள், மீட்புப் பணிகளை தீவிரப்படுத்துவதற்கும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x