Published : 01 Aug 2018 06:54 PM
Last Updated : 01 Aug 2018 06:54 PM

ஜனநாயகப்பூர்வமான போராட்டங்களைக் கூட ஒடுக்க நினைப்பதா?- தமிழக அரசுக்கு முத்தரசன் கண்டனம்

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சட்டத்திற்கு உட்பட்ட ஜனநாயகப்பூர்வமான போராட்டங்களைக் கூட தமிழக அரசு தொடர்ந்து அடக்கி, ஒடுக்க நினைப்பது ஏற்புடையதல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''விவசாயிகளின் விளைநிலங்களையும், அவர்களின் வாழ்வாதாரங்களையும் பாதிக்கிற சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று திருவண்ணாமலை முதல் சேலம் வரை நடைபயணத்திற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு நடைபயணத்திற்கு அனுமதி மறுத்ததுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உட்பட பலரை கைது செய்திருக்கிறது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. இது அப்பட்டமான ஜனநாயக விரோத செயல் என்பதோடு, அரசியல் சாசனத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல். மக்கள் பிரச்சனைகளுக்காக கருத்து கூறுவதும், போராடுவதும் அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையாகும்.

இதனை தமிழக அரசு தொடர்ந்து மீறுவதால் பல்வேறு தருணங்களில் நீதிமன்றத்தை நாடுவதும், நீதிமன்றம் அனுமதி அளிப்பதும் என்பது நடைமுறையாகி வருகிறது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சட்டத்திற்கு உட்பட்ட ஜனநாயகப்பூர்வமான போராட்டங்களைக் கூட தமிழக அரசு தொடர்ந்து அடக்கி, ஒடுக்க நினைப்பது ஏற்புடையதல்ல. கைது செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அனைவரையும் விடுதலை செய்வதோடு, நடைபயணத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x