Published : 24 Aug 2018 11:38 AM
Last Updated : 24 Aug 2018 11:38 AM
திருவண்ணாமலையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக வந்த புகாரின் பேரில் உதவிப் பேராசிரியரை சஸ்பெண்ட் செய்து வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே வாழவச்சனூர் கிராமத்தில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி, அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார். இந்த
மாணவி, வேளாண் கல்லூரி உதவிப் பேராசிரியர் தங்கபாண்டியன் என்பவர் கடந்த 7 மாதங்களாக தமக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அதற்கு விடுதி காப்பாளர்களான உதவிப் பேராசிரியைகள் இரண்டு பேர் துணையாக இருந்ததாகவும் கடந்த 21-ம் தேதி குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, மாவட்ட நீதிபதி மகிழேந்தி நேற்று முன்தினம் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்ரவர்த்தி உத்தரவின்பேரில் கூடுதல் எஸ்பி வனிதா தலைமையிலான குழுவினர் நேற்று பாதிக்கப்பட்ட மாணவி, கல்லூரி முதல்வர், பாலியல் குற்றச்சாட்டு ஆளான உதவி பேராசிரியர் மற்றும் விடுதி காப்பாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ஒழுங்குமுறை ஆணையக் குழுவும் நேற்று விசாரணை நடத்தியது.
இதற்கிடையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான உதவிப் பேராசிரியர் தங்கபாண்டியனை தற்காலிக பணி நீக்கம் செய்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT