Published : 10 Aug 2018 12:42 PM
Last Updated : 10 Aug 2018 12:42 PM
திருமுருகன் காந்தியை விடுதலை செய்து அவர் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ரா.முத்தரசன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துக்களை கூறுவோரையும், போராடுபவர்களையும் தேச துரோக வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளின் கீழ் தமிழக அரசு தொடர்ந்து கைது செய்துவருகிறது. இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான, பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துச் சொல்லும் உரிமைகளுக்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டு வருவதும், அடக்கு முறைகளை ஏவுவதும் கடும் கண்டனத்திற்குரியது.
தமிழக அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக வியாழக்கிழமை அதிகாலை மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வேண்டும் . அவர் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்” என ரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT