Published : 15 Aug 2018 05:10 PM
Last Updated : 15 Aug 2018 05:10 PM

குமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை: 100 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது; சாலைகள் துண்டிப்பு

தென்மேற்குப் பருவ மழைகாரணமாக குமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்தது மழை. கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்தது. அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 23 செமீ மழை பதிவாகியுள்ளது.

இதனால் சுமார் 100 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது, வீடுகளில் வெள்ள நீர் புகுந்தன. கனமழையால் அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இன்று காலை பெருஞ்சாணி அணை நிரம்பியது. முதற்கட்டமாக அணையிலிருந்து 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இன்று காலை 30,360 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, அணைக்கு 12,265 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனையடுத்து பரளியாறு, குழித்துறையாறு, வள்ளியாறு, கோதையாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் உள்ள சுமார் 100 கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல ஏக்கர் வாழை, ரப்பர் தோட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கீரிப்பாறை பகுதியில் ரப்பர் தோட்டத் தொழிலாளிகள் தங்கியுள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கீரிப்பாறை சப்பாத்துப் பாலம் வெள்ள்த்தில் அடித்துச் செல்லப்பட்டதால் தனித்தீவாக ஏராளமானோர் தவித்து வருகின்றனர்.

பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஈசாந்தி மங்கலம், பறக்கை, சுசீந்திரம், அருமநல்லூர், தெரிசனங்கோப்பு பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஈசாந்தி மங்கலம் பகுதியில் குடியிருப்புகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. வடக்கு தாமரைகுளம் பகுதியில் தென்னந்தோப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் இன்றும் கனமழை நீடித்தது. பாலமோர் பகுதியில் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரும் நீர் வரத்து இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 9 அடி உயர்ந்துள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 33 அடியை எட்டியது. அணைக்கு 8 ஆயிரத்து 124 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x