Published : 11 Apr 2014 11:46 AM
Last Updated : 11 Apr 2014 11:46 AM

தமிழகத்தில் 6 கூட்டங்களில் மோடி தேர்தல் பிரச்சாரம்: இரண்டு கட்டங்களாக ஏற்பாடு செய்யப்படுகிறது

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக 6 இடங்களில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மோடியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் குறித்தும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் மோடி. சிவகங்கை, ராமநாதபுரம் தொகுதிகளில் பாஜக போட்டியிடுவதால் இரண்டுக்கும் பொதுவாக காரைக்குடியில் மோடியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவுக்காக பிரச்சாரம் செய்ய வருவதாக ஏற்கெனவே உறுதி கொடுத்திருக்கிறாராம் மோடி. இதே தினத்தில், தனது கூட்டணி தோழர் வைகோ-வுக்காக விருதுநகரிலும் மாநில பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்காக கன்னியாகுமரியிலும் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் மோடி. இதேபோல் தேமுதிக சுதீஷுக்காக சேலத்திலும் அன்புமணிக்காக தருமபுரியிலும் முன்னாள் பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக கோவையிலும் ஒரே நாளில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் மோடி.

எனினும் முதல் கட்டமாக தென்மாவட்டங்களில் பிரச்சாரமா அல்லது வடமாவட்டங்களில் பிரச்சாரமா என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x