Published : 09 Aug 2018 09:46 AM
Last Updated : 09 Aug 2018 09:46 AM

கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் பாதுகாப்பு திட்டமிடலில் போலீஸார் சுணக்கம்- பொதுமக்கள், கட்சியினர் குற்றச்சாட்டு

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கில் உடல் வைக்கப்பட்டிருந்தபோதும், இறுதி ஊர்வலத்தின்போதும் போலீஸார் சரியான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கருணாநிதியின் உடல் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்தது. அப் போது பொதுமக்கள் செல்வதற்கும், முக்கிய பிரமுகர்கள் செல்வதற்கும் தனித்தனி வழிகள் அமைக்கப்பட் டிருந்தன.

இந்நிலையில் 11 மணியளவில் பிரதமர் நரேந்திரமோடி வந்து அஞ்சலி செலுத்தும் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தன. அவர் சென்றதும் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியை பொதுமக்கள் ஆக்கிரமிக்க தொடங்கினர்.

மேலும், பன்னோக்கு மருத்துவமனை வழியாகவும் ராஜாஜி அரங்குக் குள் தொண்டர்கள் நுழையத் தொடங்கினர். இப்படி அத்துமீறி வந்தவர்களை போலீஸாரால் தடுக்க முடியவில்லை.

அத்துமீறி வந்தவர்களைப் பார்த்து வரிசையில் வந்து கொண்டிருந்தவர்களும் தங்கள் இஷ்டத்துக்கு செல்ல ஆரம்பித்தனர். இப்படி வந்தவர்களை போலீஸாரால் சமாளிக்க முடியவில்லை. மேலும் அத்துமீறி நுழைந்தவர்கள் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த இடம் வரை சென்று சூழ்ந்து நின்று கொண்டனர்.

நுழைவு வாயில் படிகள் அனைத்திலும் ஆக்கிரமித்து உட்கார்ந்து கொண்டனர். இவர்களை அங்கிருந்து அகற்ற முடியாமல் போலீஸார் திணறினர். இதனால் பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வந்தவர்கள் கருணாநிதியின் உடலை பார்க்கக்கூட முடியாமல் வருத்தத்துடன் சென்றனர். பின்னர் தடியடி நடத்தி போலீஸார் கூட்டத்தை கலைத்தனர்.

இதேபோலவே, இறுதி ஊர்வலத் தின்போதும் அண்ணா சாலையில் இருந்து கடற்கரை சாலை வரை உள்ள பகுதிகளில் வழியில் நின்று கொண்டிருந்த தொண்டர்களை அகற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஊர் வலத்தை தொடங்கிவிட்டனர். இதனால் வழிநெடுகிலும் கடும் சிரமத்துக்கு இடையே ஊர்வலம் சென்றது. குறைவான போலீஸாரின் எண்ணிக்கை மற்றும் சரியான திட்டமிடல் இல்லாததால் அஞ்சலி செலுத்த வந்த பலரும் சிரமம் அடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x