ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர், இந்திய ராணுவத்துக்கு புதுச்சேரி முதல்வர் பாராட்டு

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
Updated on
1 min read

புதுச்சேரி: காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதன் காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடக்கும் நிலை ஏற்பட்டது.

அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது.

இதற்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிரதமர் மற்றும் இந்திய ராணுவத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்கிற பெயரில் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.

நாட்டின் அமைதியை சீர்குலைக்க முற்படும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதற்காக பிரதமருக்கும், இந்திய ராணுவத்துக்கும் எனது சார்பிலும் புதுச்சேரி மக்கள் சார்பிலும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பயங்கரவாதத்துக்கு எதிராகவும், நாட்டின் பாதுகாப்புக்காகவும் இந்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் புதுச்சேரி அரசு என்றும் துணை நிற்கும்.” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in