Last Updated : 22 Jul, 2018 09:09 AM

 

Published : 22 Jul 2018 09:09 AM
Last Updated : 22 Jul 2018 09:09 AM

116 அடியை தொட்டது மேட்டூர் நீர்மட்டம்: 120 அடியை நெருங்குகிறது

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ள நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து காவிரியில் அதிக அளவு நீர் திறக்கப்பட்டு வருவதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்று முன்தினம் அணைக்கு விநாடிக்கு 59,954 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 64,595 கனஅடியாக அதிகரித்தது. நேற்று முன்தினம் 112.04 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 114.63 அடியானது.

இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 116 அடியை கடந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

நீர் வெளியேற்றத்தைவிட, வரத்து அதிகமாக இருப்பதால் நாளை (23-ம் தேதி) மாலைக்குள் அணை முழுக்கொள்ளளவான 120 அடியை எட்ட வாய்ப்புள்ளது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

அணை நீர் மட்டம் 100 அடிக்கு குறைவாக இருந்தபோது ஒவ்வொரு அடி உயருவதற்கு சுமார் 1 டிஎம்சி நீர் தேவைப்பட்டது. 100 அடிக்கு மேல் அணையின் நீர்தேங்கும் பரப்பு விரிவடைந்து இருப்பதால், அணை மட்டம் ஒவ்வொரு அடி உயரவும் 2 டிஎம்சி-க்கும் அதிக நீர் தேவைப்படுகிறது. நேற்று முன்தினம் 81.33 டிஎம்சி-யாக இருந்த நீர் இருப்பு, நேற்று காலை 4 டிஎம்சி அதிகரித்து 85.16 டிஎம்சி-யாக உயர்ந்துள்ளது.  நீர்மட்டம் 120 அடி கொள்ளளவை எட்ட தற்போது 8.37 டிஎம்சி நீர் தேவை.

தற்போதைய நிலையில், நீர்வரத்து நாளொன்றுக்கு 4 டிஎம்சி அதிகரிக்கிறது. இந்த கணக்கீட்டின்படி 2 நாளில் அணை 120 அடியை எட்டிவிடும். ஆனால், கர்நாடகாவில் மீண்டும் மழை தொடங்கி இருப்பதால் அங்கிருந்து வரும் நீரின் அளவு அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே, நாளை மாலைக்குள் அணை 120 அடியை எட்ட வாய்ப்புள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

அணை முழுக்கொள்ளளவு எட்டிவிட்டால், அணைக்கு வரும் நீரில் 90 சதவீதம் காவிரியில் திறக்க வேண்டியிருக்கும். எனவே, இரு நாட்களுக்கு பின்னர் அணையில் இருந்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால், காவிரி கரையோர மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.நீர்மட்டம் 115 அடியை எட்டிய நிலையில் மேட்டூர் அணை நீர் தேக்க பகுதி முழுவதும் தேங்கியுள்ள தண்ணீர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x