Published : 06 Jul 2018 08:20 AM
Last Updated : 06 Jul 2018 08:20 AM
‘செபி’ (இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்) அனுமதி பெறாமல் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மூலம் ரூ.5,600 கோடி அளவில் முறைகேட்டில் ஈடுபட்ட தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க ‘செபி’ அமைப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் பால்பாண்டி உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
சென்னையை சேர்ந்த நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் என்ற நிறுவனம் விவசாய விளைபொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் பணியை செய்கிறது. இந்த நிறுவனம் நிதி சார்ந்த பணப் பரிவர்த்தனை, பங்கு வர்த்தகம் செய்ய அனுமதி பெறவில்லை. ஆனால் இந்நிறுவனம் சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை செய்து வந்தது. இதன் மூலம் ரூ.5,600 கோடி அளவில் மோசடி நடைபெற்றுள்ளது.
‘செபி’யில் மனு
இதில் பாதிக்கப்பட்டவர்கள் செபி அமைப்பிடம் மனு அளித்தனர். செபி நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் நேரடியாக 24 தரகர்களுக்கும், மறைமுகமாக ஏராளமான தரகர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த மோசடியில் தொடர்புடைய தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
ஆக.13-ல் மீண்டும் விசாரணை
இந்த மனு, நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரூ.5,600 கோடி மோசடியில் தொடர்புடைய தரகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான மனு மீது ‘செபி’ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT