

வேலூர்: காட்பாடி கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை 44 மணி நேரத்துக்குப் பிறகு முடிவுற்றது. நள்ளிரவில் ஆவணங்கள், ஹார்டுடிஸ்களுடன் 8 கார்களில் அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகரில் நீர்வளத்துறை அமைச்சரான துரைமுருகன் வீடு உள்ளது. இவரது மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதி எம்பியாக உள்ளார். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். அமைச்சர் துரைமுருகனின் வீடு மற்றும் கதிர் ஆனந்தின் அறக்கட்டளை சார்பில் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் நடத்தப்பட்டு வரும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிஆர்பிஎப் போலீஸ் பாதுகாப்புடன் 3-ம் தேதி காலை சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், அமைச்சர் துரைமுருகன் வீட்டில் மட்டும் 7 மணி நேர தாமதத்துக்குப் பிறகு திமுக பிரமுகர்கள் வன்னியராஜா, சுனில்குமார் மற்றும் வழக்கறிஞர் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் சோதனை தொடங்கியது. பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்ட 2 இடங்களில் நடைபெற்ற சோதனை 8 மணி நேரத்தில் முடிவுற்றது. அப்போது, பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்து ரூ.28 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல், அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. வீட்டில் பூட்டியிருந்த அமைச்சர் துரைமுருகனின் தனி அறை மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரியின் தனி அறையின் பூட்டை உடைத்து சோதனை நடத்தப்பட்டது. அமைச்சர் வீட்டில் 3 தளங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ரூ.8 லட்சம் பணம் அவர்கள் வசமே ஒப்படைக்கப்பட்டது.
44 மணி நேரம் சோதனை: கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் உள்ள நிர்வாக அலுவலகம் மற்றும் கெஸ்ட் ஹவுஸ் கட்டிடத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை 3-ம் தேதி காலை தொடங்கி நேற்று நள்ளிரவு 2.30 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த சோதனையின்போது நிர்வாக கணக்குகள் பராமரிக்கப்படும் கம்ப்யூட்டர் ஒன்றின் மென்பொருள் கோளாறால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்ய முடியவில்லை. நேற்று பிற்பகல் முதல் அதிகாரிகள் சோதனை எதுவும் நடத்தாமல் காத்திருந்தனர்.
44 மணி நேரம் தொடர்ந்த சோதனை நள்ளிரவு 2.30 மணியவில் முடித்துக்கொண்டு 8 கார்களில் புறப்பட்டுச் சென்றனர். அப்போது அறக்கட்டளை தொடர்பான ஆவணங்கள் கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, கல்லூரியில் இருந்த பெரும்தொகை ஒன்றை எஸ்பிஐ வங்கி அதிகாரிகளை வரவழைத்து துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் 3-ம் தேதி இரவு வெள்ளை நிற வேனில் எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த தொகை அமலாக்கத்துறையின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த தொகை கல்லூரியின் நிர்வாக செலவு, ஊழியர்களின் சம்பளம், பொங்கல் போனஸ் உள்ளிட்டவற்றுக்காக வைத்திருந்த தொகை என்று கதிர் ஆனந்த் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தொகைக்கான கணக்குகளை காண்பித்த பிறகு திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
டெல்லியில் துரைமுருகன்: வேலூர் மாவட்டத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை தொடர்ந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன், அரக்கோணம் தொகுதி மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகனுடன் நேற்று இரவு டெல்லி புறப்பட்டார். கடந்த 2019 தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க முயன்ற பறிமுதல் செய்யப்பட்ட ரூ.11 கோடி பணம் வழக்கில் மகன் கதிர்ஆனந்துக்கு அமலாக்கத்துறை தரப்பில் நெருக்கடி கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, அந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் வழக்கறிஞர்கள் மற்றும் முக்கிய நபர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்த சென்றுள்ளதாக திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.