Published : 03 Jul 2018 07:39 AM
Last Updated : 03 Jul 2018 07:39 AM

இந்திய நிதி உதவியுடன் யாழ்ப்பாணம் பலாலி விமானதளம் புனரமைப்பு: இலங்கை அரசு முடிவு

யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி விமானதளத்தை இந்திய நிதி உதவியுடன் புனரமைக்க இலங்கை அரசு முடிவெடுத்திருப்பதாக வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் பலாலியில் 2-ம் உலகப் போரின் போது 1940-ல் ஆங்கிலேயர்களின் வான் படைத் தேவைக்காக விமானதளம் அமைக்கப்பட்டது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் கொழும்பு விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் பலாலி வழியாக சென்னைக்கு விமானப் போக்குவரத்து நடைபெற்றது. 1983-ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தொடங்கியபோது, இந்தியா மற்றும் கொழும்பிலிருந்து பலாலிக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. 1990-ம் ஆண்டு பலாலி விமானதளத்தை சுற்றியுள்ள பகுதிகளை அதி உயர்பாதுகாப்பு வளையமாக இலங்கை ராணுவம் அறிவித்தது. அப்பகுதியில் குடியிருந்த பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

கடந்த 2009-ல் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் ராஜபக்ச ஆட்சி காலத்தில் பலாலி விமானதளத்தை இந்தியாவின் நிதி உதவியுடன் புனரமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதன்படி இந்தியா கடந்த 2009 ஆகஸ்டில் முதற்கட்டமாக ரூ.5 கோடி நிதி வழங்கியது. ஆனால், பலாலியில் ராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில், அங்கிருந்து புலம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால், விமானதளத்தை புனரமைக்கும் பணிகள் நடை பெறவில்லை.

சமீபத்தில் பலாலியில் 1,500 ஏக்கர் நிலத்தில் புலம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றம் செய்ய வசதியாக அந்த நிலத்தை தனது கட்டுப்பாட்டிலிருந்து ராணுவம் விடுவித்தது. இதையடுத்து விமானதளத்தை புனரமைப்பு செய்யும் நடவடிக்கைகள் மும்முரமடைந்துள்ளன. இதுகுறித்து வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கூறும்போது, ‘‘பலாலி விமான நிலையத்தை புனரமைக்க இந்திய அரசிடம் கோரிக்கை வைத்தேன். அண்மையில் பலாலி விமானதளத்தை பார்வையிட்டு புனரமைப்பதற்கு இந்திய தூதரக அதிகாரிகள் சம்மதம் தெரிவித்திருந்தனர். விமான நிலையத்தை இந்திய நிதியுதவியுடன் புனரமைக்க இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உறுதியளித்துள்ளார்’’ என்றார்.

வரும் 10-ம் தேதி ரணில் விக்ரமசிங்க, இலங்கைக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்துவுடன் பலாலி விமானதளத்தை பார்வையிட உள்ளார். அப்போது, இந்திய நிதியுதவிடன் புனரமைப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x