Published : 28 Aug 2014 08:22 PM
Last Updated : 28 Aug 2014 08:22 PM
சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு உட்பட பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
செய்தியாளர் சந்திப்பின் விவரம் வருமாறு:
பெங்களூரில் நடைபெறும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் செப்டம்பர் 20ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருக்கிறபோது, உங்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது?
என்னுடைய மனநிலை எப்போதும் போலத்தான் இருக்கிறது.
வர இருக்கிற தீர்ப்பு, தமிழக அரசியலில் எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?
என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ இல்லையோ; மன மாற்றத்தை ஏற்படுத்தும்.
தீர்ப்புக்கான தேதியை நீதிபதி அறிவித்துள்ள இதே நாளில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை, மத்திய சட்ட அமைச்சர் சந்தித்துப் பேசியிருக்கிறாரே? இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
இதற்காக மத்திய அரசை குறை கூறுவது முறையுமல்ல; நியாயமுமல்ல! மோடி தலைமையிலே பணியாற்றுகின்ற சட்ட அமைச்சர் எந்தவிதமான இழுக்கும் மத்திய அரசுக்கு ஏற்படாமல் நடந்து கொள்வார் என்று நான் நம்புகிறேன்.
கலாநிதி மாறன் சகோதரர்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறதே?
நீங்கள் சொல்லித்தான் இந்த செய்தியே எனக்குத் தெரியும். இதில் கருத்துக் கூற விரும்பவில்லை.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்களுக்கு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறதே?
இது பற்றி கழகத்தினரோடு இன்னும் கலந்து பேசவில்லை.
மு.க.அழகிரி மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார் என்று செய்தி வருகிறதே?
பத்திரிகைகாரர்களுக்கு தீனி போட நான் விரும்பவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT