Last Updated : 19 Jun, 2018 03:40 PM

 

Published : 19 Jun 2018 03:40 PM
Last Updated : 19 Jun 2018 03:40 PM

சேலம் - சென்னை பசுமைவழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக வளர்மதி திடீர் கைது

சேலம் - சென்னை பசுமைவழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களுக்கு ஆதரவாகப் பேசியதாக, பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதியை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் - சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் எட்டு வழி பசுமை சாலை 277 கிமீ தொலைவுக்கு அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இத்திட்டத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் வீராணத்தை அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டியில் 8 வழி சாலைக்கு நிலம் அளவீடு பணிக்கு சென்ற அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அவர்களுக்கு ஆதரவாக பேசிய பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதியை வீராணம் போலீஸார் கைது செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து நிலம் அளவீடு பணி நிறுத்தப்பட்டது.

ஏற்கெனவே சேலம்-சென்னை பசுமைவழிச் சாலை திட்டத்துக்கு எதிராகப் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோன்று, மன்சூர் அலிகானை சேலத்துக்கு அழைத்து வந்து விவசாயிகளை சந்திக்க வைத்து அரசுக்கு எதிராகப் பேசத் தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளில் சேலத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷை தீவட்டிப்பட்டி போலீஸார் திங்கள்கிழமை இரவு 9 மணி அளவில் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x